மாத சம்பளம் வாங்குவோர் கவனத்திற்கு.. இபிஎப்ஓ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
உயர் ஊதியத்திற்கான ஓய்வூதியத்திற்கு மே 3-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: உயர் ஊதியத்திற்கான ஓய்வூதியத்திற்கு மே 3-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் அறிவித்துள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் (இ.பி.எப்.ஓ.) வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: "கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதிக்கு முன் ஓய்வு பெற்று, பத்தி 11 (3) -ன் கீழ் விருப்பத்தை சமர்ப்பித்திருந்த ஓய்வூதியர்கள் உயர் ஊதியத்திற்கான ஓய்வூதியத்திற்கு தகுதியானவர்கள் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழிமுறைகள் கடந்த டிசம்பர் 29-ந் தேதி மற்றும் கடந்த ஜனவரி 5-ந் தேதியிட்ட சுற்றறிக்கையின்படி கள அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதிக்கு முன் ஓய்வு பெற்று, ஓய்வுக்கு முந்தையதாக கூட்டு விருப்பத்தை சமர்ப்பித்த ஓய்வூதியர்கள், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் (இ.பி.எப்.ஓ.) இணையதளத்தில் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க கடந்த 3-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அறங்காவலர் குழு தலைவர், அத்தகைய ஊழியர்களிடம் இருந்து விண்ணப்பத்தை பெற வருகிற மே 3-ந் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து உள்ளார்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

என்ன வழக்கு
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ)கடந்த 2014-ம் ஆண்டு ஓய்வூதிய திட்டத்தில் கொண்டு வந்த திருத்தத்தின் படி, பொதுத்துறை, தனியார் நிறுவன தொழிலாளர்களிடம் இருந்து பி.எப். பிடித்தம் செய்வதற்கான ஊதிய உச்ச வரம்பு ரூ.6,500-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து கேரள ஹைகோர்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் "ரூ.15,000 என்ற வரம்பு தொகையை அடிப்படையாக கொள்ளாமல் உண்மையில் எவ்வளவு அடிப்படை ஊதியமோ அதை கணக்கிட்டு ஓய்வூதியத்தை நிர்ணயிக்க வேண்டும்" என்று கோரப்பட்டது.

இபிஎப்ஓ
உயர் நீதிமன்றத்தின் அறிவுரைப்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) புதிய விதிமுறையை கொண்டு வந்தது. கடைசி 12 மாத ஊதியத்தின் சராசரியை அடிப்படையாக கொண்டு ஓய்வூதியம் கணக்கிடப்பட்ட நிலையில் புதிய விதிமுறையில் கடைசி 60 மாத ஊதியத்தின் சராசரி அடிப்படையில் ஓய்வூதியம் முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

புதிய ஓய்வூதியம்
கடந்த 2016-ம் ஆண்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் மீண்டும் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி ஊதிய வரம்புக்கு அதிகமாக சம்பளம் பெறுவோர் கூடுதலாக 1.16 சதவீத பங்களிப்பு தொகையை வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த திருத்தங்களை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் இபிஎப்ஓ புதிதாக கொண்டு வந்த ஓய்வூதிய திட்டம் செல்லாது என்று கடந்த 2018-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது.

வழக்கு தள்ளுபடி
ராஜஸ்தான், டெல்லி உயர் நீதிமன்றங்களும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தன. இந்த தீர்ப்புகளை எதிர்த்து மத்திய அரசு மற்றும் இபிஎப்ஓ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டில் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

உச்ச நீதிமன்றம்
இதைத் தொடர்ந்து தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு, இபிஎப்ஓ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், புதியஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, உயர் நீதிமன்றங்களின் தீர்ப்பை அமல் செய்தால் இபிஎப்ஓ அமைப்புக்கு பெரும் நிதி சுமை ஏற்படும்" என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் 3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது.

புதிய திட்டத்தில் இணையமுடியாது
அந்த தீர்ப்பில் கூறியிருந்ததாவது: கேரள உயர் நீதிமன்றத்தின்தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.ஊழியர்கள் ஓய்வூதிய (திருத்த) திட்டம் 2014', சட்டப்படி செல்லும். புதிய திட்டத்தில் இணையாமல் கடந்த 2014 செப். 1-ம் தேதிக்கு முன்பு ஓய்வு பெற்றவர்கள் இனிமேல் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைய முடியாது. புதிய திட்டத்தில் இணைந்து 2014 செப். 1-க்கு முன்பு ஓய்வு பெற்றவர்கள் திட்டத்தின் பலன்களைப் பெறலாம். தற்போது பணியில் இருக்கும் ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர 6 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும். ரூ.15,000 வரம்புக்கு அதிகமாக ஊதியம் பெறும் ஊழியர்கள் கூடுதலாக 1.16 சதவீதபங்களிப்பு தொகை வழங்க வேண்டும் என்ற திருத்தம் செல்லாது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications