நாதக, தேமுதிக, ஓபிஎஸ்.. முதல்வர் ஸ்டாலினை சந்தித்த 3 தலைகள்.. எடப்பாடி அழைத்தும் போகாதது ஏன்?
சென்னை: நாம் தமிழர், தேமுதிக, ஓபிஎஸ் என்று 3 தரப்பு முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசி இருக்கின்றனர். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த போதும், இதுவரை யாரும் மரியாதை நிமித்தமாகக் கூட சந்திக்கவில்லை. இதன் பின்னணி என்னவென்று பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருக்கும் நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. ஜெயலலிதா பாணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு ஆண்டுகளுக்கு முன்பாக தொகுதியாக மக்களைச் சந்திக்கத் தொடங்கி இருக்கிறார். கொங்கு மண்டலத்தில் தொடங்கிய இந்தப் பயணம், தற்போது தென் மாவட்டங்களை எட்டி இருக்கிறது.

ஆனால் திமுக இம்முறை வேறு ரூட் எடுத்திருக்கிறது. திமுக தனது தேர்தல் பணிகளை முதலில் சொந்தக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் இருந்து தொடங்கி இருக்கிறது. மதுரையில் திமுக பொதுக்குழுவை நடத்தி முடித்த முதல்வர் ஸ்டாலின், அடுத்ததாக உடன்பிறப்பே வா என்ற பெயரில் ஒவ்வொரு தொகுதிகளிலும் நிர்வாகிகளை சந்தித்து வந்தார்.
இதன் மூலமாகத் தொகுதியில் இருக்கும் பிரச்சனைகளைக் கேட்டறிந்ததோடு, நிர்வாகிகளுக்கு இடையில் உள்ள சிக்கல்களையும் களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்பின் திமுக கூட்டணியை உறுதி செய்யத் தொடங்கி இருக்கிறது. அதாவது ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையைக் குறைப்பதற்கும், வாக்கு சதவிகிதத்தை அதிகரிப்பதற்கும் திமுக கூடுதலாக சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருக்கிறது.
அதற்கேற்ப முதல்வர் ஸ்டாலினை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து சந்தித்துச் செல்கின்றனர். இதன்படி தேமுதிக உடனான கூட்டணியை மட்டும் திமுக உறுதி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே திமுகவுடன் தேமுதிக நெருக்கம் காட்டி வருகிறது.
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகும் பட்சத்தில், உடனடியாக தேமுதிக சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓரணியில் ஸ்டாலின் என்ற பிரச்சாரத்தைத் தொண்டர்கள் முன்னிலைப்படுத்தி வரும் நிலையில், இன்னும் 2 மாதங்களில் திமுக தலைவர்கள் அனைவரும் களத்திற்குத் திரும்பத் திட்டமிட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைத்தும் அதிமுக உடன் இதுவரை எந்தக் கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
விசிக, சிபிஎம், சிபிஐ, நாதக, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கும் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துவிட்டார். ஆனால் யாரும் எடப்பாடி பழனிசாமியை நேரில் கூட சென்று மரியாதை நிமித்தமாக சந்திக்கவில்லை. இதனால் மீண்டும் 2021ல் அமைக்கப்பட்ட பாமக, தமாகா, பாஜக கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டிய சூழலுக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா இருந்த போது சசிகலா மூலமாக அதிமுக கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதேபோல் 2021ஆம் ஆண்டு ஆளுங்கட்சி என்பதால் அதிமுக உடன் கூட்டணி அமைக்க பல்வேறு கட்சிகளும் தயாராக இருந்தன. ஆனால் எதிர்க்கட்சியான பின் எடப்பாடி பழனிசாமி சிறிய கட்சிகளின் தலைவர்களுடன் இணைந்து போராட்டத்தில் கூட ஈடுபடவில்லை.
மற்ற கட்சித் தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமிக்கு பெரியளவில் நட்பு இல்லாததே அவர் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. திமுகவை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருந்த போதே ஸ்டாலின் அனைத்து போராட்டங்களுக்கும் சிறிய கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பார். இதனால் அவர்களுடனான நட்பு மற்றும் திமுகவின் வளர்ச்சி ஆகியவை கூட்டணி பேச்சுவார்த்தையிலும் உதவியாக இருப்பதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications