EPS: மதுராந்தகத்தால் வந்த மாற்றம்! 20 லிருந்து 30க்கு வந்த எடப்பாடி பழனிசாமி! பாஜக என்ன செய்யும்?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாஜகவுக்கு 30 சீட் கொடுக்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் 20 தொகுதிகள்தான் என கறார் காட்டிய நிலையில் தற்போது கூடுதலாக 10 சீட்டு கொடுப்பதற்கு காரணமே அமமுகதானாம்!
தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்படுகின்றன. தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளுக்காகக் கட்சிகள் குழுக்களை அமைத்துள்ளன. இத்தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாம் தமிழர் வழக்கம் போல் எந்த தேர்தலிலும் கூட்டணி வைப்பதில்லை. தமிழக வெற்றிக் கழகமோ, விஜய் தலைமையை ஏற்போர் மட்டுமே கூட்டணியில் வர முடியும் என்பதால் பிற முக்கிய கட்சிகள் இணையும் வாய்ப்பு குறைவு. மறுபுறம், திமுக ஆட்சி வரக்கூடாது என்பதில் அதிமுக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது.
கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் டெல்லி தலைமை கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது அதிமுகவுக்கு 170 தொகுதிகளையும், கூட்டணிக் கட்சிகளுக்கு 64 தொகுதிகளையும் ஒதுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்தாராம்.
ஆனால் டெல்லி தலைமை இதற்கு மறுத்து, அதிமுக 150 தொகுதிகளில் போட்டியிட்டு, மீதமுள்ள 84 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என திட்டவட்டமாகத் தெரிவித்ததாம். அவர்கள் சொன்ன கணக்கு என்னவென்றால் 84 தொகுதிகளில் பாஜகவுக்கு 40, பாமகவுக்கு 15, தேமுதிகவுக்கு 10, அமமுகவுக்கு 8. எஞ்சிய 11 தொகுதிகள் பிற கூட்டணிக் கட்சிகளுக்கு என கணக்கு போட்டிருந்ததாம். ஆனால் பாஜகவுக்கு 20 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருந்தாராம்.
இந்த நிலையில் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க பாஜக கூட்டணி எத்தனையோ முயற்சி எடுத்தும் அது முடியாமல் போய்விட்டது. இதனால் தேமுதிக, பாஜக - அதிமுக கூட்டணியில் இணையவில்லை. இந்த நிலையில் தற்போது பாஜகவுக்கு 30 சீட் வரை கொடுக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளாராம்.
இதற்கு காரணம் பாஜகவின் செயல்பாடுகள் என்கிறார்கள். அதாவது அதிமுக கூட்டணியில் அமமுகவை இணைய வைத்தது, மதுராந்தகம் பொதுக் கூட்டத்தில் தினகரன் பேசிய விதம் உள்ளிட்டவைகளுக்கு காரணம் பாஜகதான் என எடப்பாடி பழனிசாமி உணர்ந்து, அந்த மகிழ்ச்சியில் கூடுதலாக 10 சீட் கொடுக்க முன் வந்தார் என்கிறார்கள்.
அதிமுகவில் ஓபிஎஸ் இருந்த வரை தென் மாவட்டத்தில் அந்த செல்வாக்கு கிடைத்துவந்தது. தற்போது அவர் இல்லாத நிலையில் அந்த செல்வாக்கை தினகரன் மீட்டெடுப்பார் என எடப்பாடி பழனிசாமி நம்புகிறாராம். அதனால்தான் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications