கார் மாறி.. முகத்தை மூடி.. அமித்ஷாவிடம் என்னதான் பேசினார் எடப்பாடி? இது தான் மேட்டரே! அதகள அதிமுக
சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லியில், பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அதிமுகவின் அதிருப்தி தலைவர்களை சந்தித்துப் பேச வேண்டாம் என அமித் ஷாவிடம் எடப்பாடி கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையனுடன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துவார்கள் எனக் கூறப்படுகிறது.
அதிமுக அமைதியாக இருந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. 2016ல் ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவில் சிறு சலசலப்புகள் கூட எழாது. ஏதோ ஒரு நிர்வாகி தவறு செய்துவிட்டால் அவர் எந்தப் பதவியில் இருந்தாலும் கண நேரத்தில் தூக்கி எறிந்துவிடுவார் ஜெயலலிதா.
ஆனால் அவருக்கு ஆதரவாளர்கள் என்ற பெயரில் அடுத்த நாள் ஒருவர் கூட வாய் திறக்க மாட்டார்கள். எவ்வளவு பலம் பொருந்திய மாவட்டச் செயலாளராக அல்லது அமைச்சராக இருந்தாலும் ஜெயலலிதா உத்தரவிட்டால் உத்தரவிட்டதுதான். அதற்குப் பிறகு மறுபேச்சு கிடையாது.

அதிமுக பிளவு
ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு அதிமுகவில் தினம் தினம் பிரச்சனைகள்தான். ஓபிஎஸ் தர்மயுத்தம், சசிகலா சிறைக்குச் சென்றது, எடப்பாடி முதல்வரானது, நம்பிக்கை வாக்கெடுப்பு, டிடிவி தினகரன் பிளவு, ஓபிஎஸ் ஒன்றுசேர்ந்தது, டிடிவி தினகரன் சசிகலா நீக்கம் என பல பிரச்சனைகளை அதிமுக நான்காண்டுகளில் சந்தித்தது. 2021 தேர்தல் வரை ஓபிஎஸ் எடப்பாடி ஒன்றாக இருந்தனர். அதற்குப் பிறகு ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் விரட்டியடிக்கப்பட்டார்.
எடப்பாடி பழனிசாமி
தற்போதைய சூழலில் கட்சியின் முழுமையான கட்டுப்பாடு எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கிறது. அதே நேரத்தில் அவர் மீது பல சீனியர்கள் அதிருப்தியில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதன் வெளிப்பாடாகத்தான் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார் அதிமுக முன்னாள் அமைச்சரும் கட்சியின் மிக மூத்தவர்களில் ஒருவருமான செங்கோட்டையன்.
செங்கோட்டையன்
இதற்கிடையே செங்கோட்டையன் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. நேற்றும் இன்றும் தர்மபுரியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை ரத்து செய்துவிட்டு டெல்லிக்குச் சென்றார். கடந்த முறை கார்கள் மாறி மாறிச் சென்ற எடப்பாடி பழனிசாமி இந்தமுறை திண்டுக்கல் சீனிவாசன், கே பி முனுசாமி உள்ளிட்ட சீனியர்களுடன் சென்று அமித்ஷாவை சந்தித்துப் பேசியதாகச் சொல்லப்படுகிறது.
எடப்பாடி அமித்ஷா சந்திப்பு
பிறகு நிர்வாகிகளை அனுப்பிவிட்டு அமித்ஷாவுடன் மட்டும் சுமார் 30 நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஆலோசனையில் அதிமுக பாஜக கூட்டணியின் நிலை, புதிய கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வருவது, தமிழக அரசியல் சூழல், திமுகவின் செயல்பாடுகள், புதிய சவாலான விஜய்யின் கட்சியை உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாகச் சொல்லப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் தலைவர்களை அமித்ஷா சந்திக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
ஓபிஎஸ் டிடிவி ஆலோசனை
மேலும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை கூட்டணிக்குள் கொண்டுவர அழுத்தம் கொடுக்க வேண்டாம் என அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி சற்று ஆழமாகவே எடுத்துச் சொன்னார் என்கின்றனர் அதிமுகவினர். இந்த நிலையில் அமித்ஷாவும் சில அறிவுறுத்தல்களை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கியதாகச் சொல்லப்படுகிறது. அதாவது கட்சியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை சேர்க்கவில்லை என்றாலும், கூட்டணியில் சேர்க்க வேண்டும் எனக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. அப்படிச் செய்ததால் 2026 தேர்தலில் வெற்றி பெற்று திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற முடியும் என அமித்ஷா அறிவுறுத்தினாராம்.
அடுத்து என்ன?
இது ஒருபுறம் இருக்க எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தை உற்று கவனித்து வருகிறது டிடிவி, ஓபிஎஸ் தரப்பு. ஏற்கனவே செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் பேசி இருக்கிறார். இந்த நிலையில் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் வெளியே கசிந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சியில் உள்ளது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications