I Am Your Dad.! என்ன தவறு செய்தேன்? எம்ஜிஆர் பேசிய அதே இடத்தில் எடப்பாடி! செங்கோட்டையனுக்கு சறுக்கல்
சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார். இந்நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் எம்ஜிஆர் கூட்டம் நடத்திய அதே இடத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில் தவெகவுக்கு சென்ற செங்கோட்டையனுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அக்கட்சிக்கு சென்ற 32 பேரில் 12 பேர் மீண்டும் அதிமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது செங்கோட்டையனுக்கு மிகப்பெரிய சறுக்கலை உருவாக்கும் என்கின்றனர்.
தமிழக அரசியலில் கவனம் தற்போது ஒன்றே ஒன்று.. அது தான் கோபிச்செட்டிப்பாளையம். காரணம், நவம்பர் 30ஆம் தேதி சத்தியமங்கலம்-கோபி நெடுஞ்சாலையில் உள்ள முத்துமகால் திருமண மண்டப திடலில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டம் நடைபெற இருக்கும் இடத்துக்கே தனி அரசியல் வரலாறு இருப்பதால், அதிமுகவினர் ஏற்கனவே கொண்டாட்ட மனநிலையில் இருக்கின்ரனர். கோபியில் பல தசாப்தங்களுக்கு பிறகு இவ்வளவு பெரிய அதிமுக பொதுக்கூட்டம் நடக்கிறது என்பதோடு, மேலும் ஒரு பரபரப்பு செய்தி அந்த பகுதிக்கே உயிர் ஊட்டிக் கொண்டிருக்கிறது.

செங்கோட்டையன்
அது என்னவென்றால் செங்கோட்டையனைத் தொடர்ந்து தவெகவில் இணைந்த 32 பேரில் 12 பேர் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பத் தயாராகிவிட்டனர் என்பதுதான். 1980 தேர்தல் பிரசாரத்தில் எம்ஜிஆர் இந்த இடத்தில்தான் "என்ன தவறு செய்தேன்?" என்று கேட்டு மக்களின் மனதை கவர்ந்தார். அந்த வரலாற்று இடத்தில் இபிஎஸ் பொதுக்கூட்டம் நடத்தப்போவது அதிமுக தொண்டர்களுக்கு பெருமை. "எம்ஜிஆர் இரண்டாவது முறையாக முதல்வரானது போல, இபிஎஸும் இங்கிருந்துதான் மீண்டும் அரசியலில் பெரிய பாய்ச்சல் கொடுக்கப் போகிறார்" என்று அதிமுகவினர் நம்பிக்கையுடன் தயாரிப்புகளை செய்து வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி
செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தபோது, அவர் 50 வருட அரசியல் அனுபவம் கொண்டவர் என்பதால், நூற்றுக்கணக்கான நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவருடன் வருவார்கள் என விஜய் தரப்பு எதிர்பார்த்தது. அதற்காக பனையூரில் ஏற்பாடுகளும் செம்மையாக நடந்தன. ஒரே ஒரு பஸ்ஸில் 32 பேர் மட்டும். அவர்களும் அதிமுகவில் இருந்து நடவடிக்கைக்கு ஆளாகி நீக்கப்பட்டவர்களே. உண்மையான அதிமுக நிர்வாகிகள் - வட்டச் செயலாளர், கிளைச் செயலாளர், நகரச் செயலாளர் யாரும் கூட அவருடன் செல்லவில்லை.
தவெக விஜய்
ஒரு கவுன்சிலரை கூட கூட்டிச் செல்வதற்கும் அவரால் முடியவில்லை. இதனால், விஜய் கட்சியிலும் அவர்களுக்கு ஒரு சாதாரண வரவேற்பு தான் கிடைத்தது. சத்தியபாமா எம்பி கூட சேரில் உட்கார முடியாத நிலை உருவானது. இது அனைவரையும் சங்கடப்பட வைத்தது. இபிஎஸ் கோபியில் நடத்தப் போகும் கூட்டம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தால், செங்கோட்டையனின் அரசியல் நிலை மேலும் சிக்கலாகும் என்று அவரே பயந்து வருகிறார்.
அதிமுக திரும்பும் நிர்வாகிகள்
அந்த பயத்தால்தான் தற்போது பல அதிமுக நிர்வாகிகளிடம் மறைமுகமாக பேச முயற்சி செய்கிறார். அவர் அழைப்பை யாரும் எடுக்காததால், வேறு எண்களில் இருந்து தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அவருடன் சென்ற 32 பேரில் 12 பேர் மீண்டும் அதிமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடக்கிறது. இதற்கு இபிஎஸ் இன்னும் 'ஓகே' சொல்லவில்லை என்றாலும், அவர்கள் மீண்டும் இணைந்துவிட்டால், செங்கோட்டையனின் அரசியல் செல்வாக்குக்கு பெரிய டேமேஜ் என்பது உறுதி.
தமிழக அரசியல்
கரூர் சம்பவத்துக்கு பிறகு இபிஎஸை ஆதரித்திருந்த தவெகவினருக்கு, செங்கோட்டையனை திடீரென சேர்த்தது கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கோபி பகுதி தவெக நிர்வாகிகள், "50 ஆண்டுகளாக எங்களை வளர விடாமல் இருந்தவர் இப்போது எங்கள் தலைவரின் கட்சிக்கு வந்துவிட்டதால் எங்கள் வாய்ப்புகள் முற்றிலும் குறைந்துவிட்டன" என்று வருந்துகிறார்கள். "செங்கோட்டையனுக்கு இங்கு செல்வாக்கு இல்லை... இபிஎஸுக்குத்தான் உண்மையான ஆதரவு இருக்கிறது. அதை 30ம் தேதி கூட்டம் நிரூபிக்கும்" என அதிமுக நிர்வாகிகள் தன்னம்பிக்கையுடன் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications