செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கமா? யோசிக்காமல் எடப்பாடி பழனிசாமி சொன்ன பதில்!
சென்னை: செங்கோட்டையன் மீது நடவடிக்கை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, கட்சி கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதால் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அவரது உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவது குறித்துக் கட்சி தலைமை முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும். இதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள வேண்டும். அப்படி மேற்கொள்ளவில்லை எனில் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணிகளை நான் மேற்கொள்வேன் என்று செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு, செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் மற்றும் அவரை சார்ந்தவர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சுமார் 2,000 அதிமுகவினர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக தங்களது கட்சி பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்தனர். செங்கோட்டையனின் இந்த நடவடிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஹரித்வார் கோயிலுக்கு செல்ல இருப்பதாக கூறிவிட்டு டெல்லி சென்றார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டுத் திரும்பினார். இந்த விவகாரம் அதிமுகவினர் இடையே மீண்டும் பேசும் பொருளானது.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் விதித்திருந்த 10 நாள் கெடு நாளை செப்டம்பர் 15 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனிடையே, செங்கோட்டையன் மீண்டும் டெல்லி செல்வாரா என்ற கேள்வி எழுந்தது. அவர் மீண்டும் டெல்லி சென்றால், அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரத்தில் பாஜக தலைமை எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்றார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அமித்ஷாவை சந்தித்து விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி காரில் முகத்தை மூடியபடி இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் டெல்லியில் நடந்த சந்திப்பு தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது, செங்கோட்டையன் மீது நடவடிக்கை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "செங்கோட்டையன் கட்சி கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதால் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டது., அவரது உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவது குறித்துக் கட்சி தலைமை முடிவு செய்யும். உட்கட்சி விவகாரத்தை பகிரங்கமாகப் பேச முடியாது" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications