TNPSC அறிவிப்பால் அதிர்ந்து போன தேர்வர்கள்.. “ஸ்டாலின் சொன்னது என்னாச்சு?” பாய்ந்து வந்த எடப்பாடி!
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், காலி பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
தமிழக இளைஞர்கள் பெரிதும் எதிர்பார்த்த TNPSC குரூப் 4 தேர்வு வரும் ஜூலை மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், காலி பணியிடங்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் தேர்வர்கள் கவலை அடைந்துள்ளனர்.

குரூப் 4 தேர்வு
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம், குரூப்- 4 தேர்வுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது. 3,935 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வரும் ஜூலை 12 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப 2025 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - தொகுதி IV பணிகளுக்கான தேர்வு 12.07.2025 அன்று நடைபெறும். தேர்வர்கள் மே 24ம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் அப்செட்
இந்நிலையில், குரூப் 4 காலி பணியிடங்கள் மிகக் குறைவாக உள்ளதாக தேர்வர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். பல லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் குரூப் 4 தேர்வுக்காக தயாராகி வரும் நிலையில், 3,935 காலி பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 187 வது வாக்குறுதியாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறைவான காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவித்துள்ளது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி காட்டம்
இது குறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, காலி பணியிடங்கள் குறித்து திமுக அரசை கேள்விக் கேட்டுள்ளார். அவரது பதிவில், "தமிழ்நாடு அரசில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், வெறும் 3,935 பணியிடங்கள் (TNPSC Group - 4) தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது ஸ்டாலின் மாடல் அரசு. இந்த தேர்வை நம்பி வருடக்கணக்கில் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் இது!
ஆட்சிக்கு வந்தால், 3.50 லட்சம் இளைஞர்கள் காலியாக உள்ள பணியிடங்களில் நியமிக்கப்படுவார்கள் என தேர்தல் அறிக்கையில் சொன்னது நினைவிருக்கிறதா ஸ்டாலின் அவர்களே ? VAO உள்ளிட்ட அரசுப்பணிகளில் சேர வேண்டும் என்பது பல ஏழை எளிய குடும்பத்தில் இருந்து வரும் இளைஞர்களின் கனவு. பணியிடங்கள் இருந்தும் அதனை நிரப்பாமல் வஞ்சிப்பது, இளைஞர்களின் கனவை சிதைக்கும் செயல்!
இளைஞர்களின் கனவை சிதைக்கும் செயல் - எடப்பாடி
கொடுத்த வாக்குறுதிக்கும், மாணவர்களின் உழைப்புக்கும் கொஞ்சம் கூட மதிப்பளிக்காமல், "அரசு" என்பதன் இலக்கணத்தையே மறந்து, கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்படும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக Group-4 பணியிடங்களை 10,000-ஆக உயர்த்திடுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications