“உங்க பிரச்சனைய உங்களோட வச்சிக்கோங்க”! அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி எச்சரிக்கை! அதிர்ந்த ர.ரக்கள்
சென்னை: அதிமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். தனிப்பட்ட பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டக்கூடாது என இபிஎஸ் எச்சரித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக கட்சியின் பலம், பலவீனம் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக தொகுதி நிலவரம் அறிவதற்காக, கள ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், அதிமுக சார்பில் கட்சி ரீதியிலான 82 மாவட்டங்களுக்கும் கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமி பொறுப்பாளர்களை நியமித்தார். இந்தநிலையில், அமைப்பு ரீதியிலான 82 மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காணொலி காட்சி மூலமாக ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணை பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும், பூத் கமிட்டியை விரைவாக அமைத்து தலைமைக்கு அனுப்ப வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியாக தெரிகிறது. மேலும், மாவட்ட செயலாளர்களிடம் அவர்களுடைய மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள், குறித்தும் கேட்டறிந்தார்.
இந்தக் திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. . தனிப்பட்ட பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டக்கூடாது என இபிஎஸ் எச்சரித்துள்ளார்.
மேலும், கூட்டணி விவகாரம் குறித்தும் யாருடனும் விவாதிக்கக்கூடாது, கூட்டணி குறித்து தலைமை பார்த்துக் கொள்ளும், கூட்டணி குறித்து தலைமை முடிவெடுக்கும் எனச் சொல்லி விடுங்கள், கருத்து வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜிக்கும், மாஃபா பாண்டியராஜனுக்கும் இடையே, மோதல் இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன், விருதுநகரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில், பாண்டியராஜனுக்கு சால்வை அணிவிக்க வந்த நிர்வாகியை, மேடையிலேயே ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்தார்.
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விருதுநகர் அதிமுகவில் குறுநில மன்னர் போல் ராஜேந்திர பாலாஜி செயல்படுகிறார் என, மாஃபா பாண்டியராஜன் விமர்சித்தார். இந்நிலையில், சிவகாசியில் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, 'நான் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அ.தி.மு.கவில் இருப்பவன். லண்டனில் படித்த சிலர், என்னை குறுநில மன்னன் என்கின்றனர். நான் குறுநில மன்னன்தான்.
நீ பல கட்சி மாறி வந்தவன்; நீ ஏன் குறுக்கே வருகிறாய். போகிற போக்கில் அடித்து தள்ளி விடுவேன். கட்சியில் மரியாதை இல்லை என்று கூறும் நீ, இந்த கட்சிக்கு என்ன செய்தாய் என நினைத்துப் பார்க்க வேண்டும். ஜெயலலிதாவையே தவறாக பேசியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது" என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை ஒருமையில் பேசி இருந்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இருவரும் பகிரங்கமாக மோதிக் கொண்டது, அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பாண்டியராஜன் சந்தித்து பேசினார்.
கட்சி நிர்வாகிகள் மத்தியில், தன்னை ராஜேந்திர பாலாஜி விமர்சித்தது குறித்து, அப்போது புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் இன்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துப் பேசி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications