திமுகவில் இணைந்த அமமுக மாவட்டச் செயலாளர்! ஈரோடு மேற்கு மாவட்டத்தில் டிடிவி தினகரன் கூடாரம் காலி!
சென்னை: ஈரோடு மேற்கு மாவட்ட அமமுக செயலாளர் சக்தி என்ற சிவசுப்ரமணியன், அக்கட்சியிலிருந்து விலகி முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
அவருடன் ஈரோடு மேற்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள் கூண்டோடு விலகி தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.
நேற்றைய தினம் அமமுக தொழிற்சங்க நிர்வாகிகள் 120 பேர் கூண்டோடு அக்கட்சியிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

அமமுக நிர்வாகிகள்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நாளுக்கு நாள் நிர்வாகிகள் விலகி மாற்றுக் கட்சிகளில் இணையும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. டிடிவி தினகரன் கட்சிப் பணிகளில் பிடிப்பின்றி அறிக்கை அரசியல் செய்து வருகிறார் என்பதும் அவரை பார்க்கவே முடியாது என்பதும் அமமுகவிலிருந்து விலகுபவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் ஆகும். ஈரோடு மேற்கு மாவட்ட அமமுக செயலாளராக இருந்த சக்தி என்ற சிவசுப்ரமணியன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.

இளைஞரணி நிர்வாகி
அவர் மட்டும் வராமல் தன்னுடன் ஒரு பெரும் படையையே அமமுகவிலிருந்து திமுகவுக்கு அழைத்து வந்துள்ளார். இதனால் ஈரோடு மேற்கு மாவட்டத்தில் அமமுகவின் கூடாரம் காலியாகியுள்ளது. டிடிவி தினகரன் மீது அவர் கடும் அதிருப்தியில் இருந்ததை அறிந்த ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், இது தான் சமயம் எனப் பேசி அவர்களை திமுக பக்கம் இழுத்த்விட்டார்.

முக்கிய நிர்வாகிகள்
அமமுகவிலிருந்து மாவட்டச் செயலாளர் விலகுவது என்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே பல மாவட்டச் செயலாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் தினகரனின் அரசியல் நிலைப்பாடு பிடிக்காமல் அவருக்கு குட் பை சொல்லியிருக்கிறார்கள். தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த அய்யாதுரை பாண்டியன் உட்பட இப்படி பலரை உதாரணமாக கூறலாம்.

கட்சி கலகலத்தது
அமமுக தொழிற்சங்க நிர்வாகிகள் 120 பேர் கூண்டோடு அக்கட்சியிலிருந்து விலகி மீண்டும் நேற்று அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. டிடிவி தினகரனின் அமமுக கலகலத்துப் போகும் தகவல் அறிந்து எடப்பாடி பழனிசாமி முகாம் உற்சாகம் அடைந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications