ஈரோடு கிழக்கு தேர்தல் அதிகாரி மனீஷ் திடீர் மாற்றம்- புதிய அதிகாரி ஶ்ரீகாந்த்-காரணம் என்ன தெரியுமா?
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக பணியாற்றிய மனீஷ் திடீரென மாற்றப்பட்டுள்ளார். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரியாக ஶ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஓசூர் மாநகராட்சி ஆணையரான ஶ்ரீகாந்த் நேற்று இரவே ஈரோடு கிழக்கு தொகுத்இ இடைத்தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றார். கர்நாடகா மாநிலத்தில் வாக்குரிமை கொண்ட பெண்ணின் வேட்பு மனுவை ஏற்றதால் மனீஷ் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 5-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதியில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு நாளை தொடங்குகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 209 முதியவர்கள், 47 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 256 பேர் தபால் மூலம் வாக்களிக்க உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 58 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் 3 பேர் வேட்பு மனுக்கள் நிராகரிப்பட்டன. எஞ்சிய 55 பேரில் 8 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதால் 47 பேர் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் நடவடிக்கையின் போது நேற்று கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணின் வேட்பு மனுவை ஏற்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவரது வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் மொத்தம் 46 வேட்பாளார்கள் உள்ளனர். இவர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக மனீஷ் திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஶ்ரீகாந்த் நேற்று இரவே பொறுப்பேற்றுக் கொண்டார். ஓசூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய ஶ்ரீகாந்த் சென்னை தலைமை தேர்தல் அலுவலகத்தில் இணை தேர்தல் அதிகாரியாகவும் பணியாற்றியவர்.
மனீஷ் மாற்றம் பின்னணி என்ன?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கர்நாடகாவைச் சேர்ந்த பத்மாவதி என்ற பெண் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். கர்நாடகாவில்தான் வாக்குரிமை உள்ளதாகவும் வேட்பு மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். தமிழக சட்டசபை தேர்தலில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் போட்டியிட முடியாது என்ற நிலையிலும் பத்மாவதியின் வேட்பு மனுவை ஏற்றார் மனீஷ். இதனை சின்னம் ஒதுக்கும் நடவடிக்கையின் போது இதர வேட்பாளர்கள் சுட்டிக் காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் பின்னரே பத்மாவதியின் வேட்பு மனுவை மனீஷ் நிராகரித்தார். இந்த சர்ச்சையால்தான் மனீஷ் அதிரடியாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications