விஜய்க்கு எல்லாம் சரியாகவே போனது.. ஆனால் காங்கிரஸ் வந்த பின்னர்.. ஆட்டமே மாறியது
சென்னை: விஜய்க்கு எல்லாமே மே 6ம் தேதி பிற்பகல் வரை எல்லாமே சரியாகவே போனது.. எப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதாக முதல் வரிசையில் ஓடி வந்து முயல் வேகத்தில் ஆதரவு தந்ததோ அப்போது தான் ஆட்டமே மாறியது. அதுவரை ஆதரவ தரலாம் என்ற மனநிலையில் இருந்த அதிமுக தலைமை அப்படியே பின்வாங்கியது. திமுகவின் கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்று விசிக, இடதுசாரிகளும், பாஜகவின் கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்று பாமகவும் தயங்கியது அதன்பிறகு தான். காங்கிரஸ் உள்ளே வந்ததால் இப்போது விஜய்க்கு பதவி ஏற்பதிலேயே சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
விஜய் ஜெயித்ததற்கு முதலில் வாழ்த்து சொன்னது பாஜகதான். அவரை பதவியேற்க கட்சி வேறுபாடு இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியது பாஜக தான். ஆளுநரும் கேரளாவில் இருந்து சென்னை வந்தார். அதிமுக தலைமை ஆதரவு தரப்போகிறது என்று தகவல்கள் பரவியது. இந்த பக்கம் விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரிக்க போவதாவும் தகவல்கள் பரவியது. எல்லாமே சரியாகவே போனது.

ஆனால் நேற்று தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு தந்த அடுத்த நொடி எல்லாமே தவெகவிற்கு எதிராக மாறியது. காங்கிரஸ் கட்சி ஆதரவு தந்த நிலையில் இன்னும் ஐந்து பேர் இருந்தால் ஆட்சி என்கிற நிலை ஏற்பட்டது. பா.ம.க. த.வெ.க.வோடு சேர்ந்துவிடும். அந்த அமைச்சரவையில் சௌமியா அன்புமணி சேர்ந்து விடுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் நேற்று திடீரென்று அன்புமணி ராமதாஸ் எந்த கருத்தையும் இது தொடர்பாக சொல்லாமல் நன்றி வணக்கம் என்று மட்டும் கூறிவிட்டு புறப்பட்டார்..
ஆனால் பாமக தவெக உடன் சேர மறுத்துவிட்டதாகவும் அதற்கு ஈடாக அன்புமணி ராமதாஸ்க்கு, மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற பேரம் பேசப்பட்டதாகவும் ஊகமாக தகவல்கள் பரவியது. மறுபுறம் காங்கிரஸ் ஆதரவால் அப்செட்டான அதிமுக, நேற்று ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியது. இது ஒருபுறம் எனில் த.வெ.க.விற்கு ஆதரவு கொடுப்பது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடத்தப்பட்டு அதில் முடிவு எடுக்கப்படும் என்று நேற்று காலை திருமாவளவன் கூறியிருந்த நிலையில், இந்த கூட்டம் ரத்து செய்யப்ட்டது.
ஏற்கனவே காங்கிரஸ் வெளியேறியதற்காக கடுமையாக திட்டி இருந்தது திமுக. இப்போது விசிகவும் திமுக கூட்டணியை விட்டு செல்ல முடிவு செய்தால், அது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என விசிக தயங்குவதாக கூறப்படுகிறது. இடதுசாரிகளும் திமுக கூட்டணியை விட்டு செல்ல வாய்ப்பே இல்லை என்கிற மனநிலையில் இருக்கிறார்களாம்.
எனினும் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் அதிமுகவில்இருந்து கணிசமானோரை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களிடம் இருந்து பாதுகாக்கவே புதுச்சேரி தவளைக்குப்பம் ஓட்டலில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை கூறுகிறது.
மறுபக்கம் 117 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொண்டு வந்தால் தான் ஆட்சியமைக்க அழைக்க முடியும் என ஆளுநர் கூறுகிறார். இதனால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. ஆளுநர் அழைக்காமல் முதல்வர் பதவியேற்பு நடைபெற வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் உள்ளே வந்ததை பாஜக விரும்பவில்லையாம். இதனால் விஜய், கைக்கு கிடைத்த சான்ஸை தவறவிட்டதாக சொல்கிறார்கள் மூத்த பத்திரிக்கையாளர்கள்.














Click it and Unblock the Notifications