குட்கா முறைகேடு வழக்கு! சி.விஜயபாஸ்கர், ஜார்ஜ், டி.கே. ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஹைகோர்ட்டில் ஆஜர்!
சென்னை: குட்கா முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் , பி.வி.ரமணா, முன்னாள் டி.பி.ஜி, டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல் முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
தமிழகத்தில் தடையை மீறி, அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கபட்டது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி. - டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய - மாநில அரசு அதிகாரிகள் என 27 பேருக்கு எதிராக சிபிஐ, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், இந்த வழக்கை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி, சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
எம்.பி, - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி. சஞ்சய் பாபா முன், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் , பி.வி.ரமணா, முன்னாள் டி.பி.ஜி, டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல் முன்னாள் ஆணையர் ஜார்ஜ் ,மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார், உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி இருந்தனர்.
குற்றப்பத்திரிகை நகல் இன்னும் தயாராகவில்லை என்பதால் இன்றைய தினம் யாருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கவில்லை. இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதி, செப்டம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications