அரை சதம் தாண்டியது.. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 51-வது முறையாக நீட்டிப்பு!
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதோடு 51வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளன. தற்போது செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கபட்டு இருக்கும் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதனமை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 51வது முறையாக நீட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த 29 ஆம் தேதி செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 50 வது முறையாக நீட்டிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்து இருக்கிறார். இந்த மனு மீதான விசாரணையில் அமலாக்கத்துறையிடம் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியது. அதேவேளையில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, வழக்கின் விசாரணை வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications