ஆச்சரியம் தந்த ஆம்னி.. தமிழகத்துக்கு 300 பேட்டரி பஸ்கள்.. திக்குமுக்காடிய பயணிகள்.. இதுதான் பிளான்
சென்னை: தமிழ்நாட்டிற்கு 300 பஸ்கள் வரப்போகிறதாம்.. இதைக்கேட்டு பயணிகள் திக்குமுக்காடிப்போயுள்ளனர்.. இந்த அறிவிப்பை யார் வெளியிட்டிருக்கிறார்கள் தெரியுமா?
வழக்கமாக பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஒவ்வொரு முறையும் புகார் வந்தபடியே இருக்கும்.. ஏற்கனவே, ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் 30 சதவீதம் கட்டணத்தை குறைத்து நிர்ணயித்தனர்.

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஆம்னி பஸ்களின் வகைகளின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயித்து அறிவித்திருந்தனர். ஆனால் அந்த கட்டணமும் ரூ.1000-க்கு குறைவாக இல்லை என்றார்கள். அதாவது, படுக்கை வசதிக்கு ரூ.2000 முதல் ரூ.3000 வரை நீண்ட தூரத்திற்கு நிர்ணயிக்கப்பட்டதாக பயணிகள் வேதனையுடன் கூறியிருந்தனர்.
தமிழக அரசு: இதற்கு பிறகு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் பல அதிரடிகளை மேற்கொண்டது.. மதுரை, திருநெல்வேலி, கோவை, கும்பகோணம் போன்ற போக்குவரத்து கழகங்களை சேர்ந்த 500 பஸ்கள் முன் பதிவில் சேர்க்கப்பட்டன. ரிசர்வேஷனில் பஸ்சில் இடம் இல்லை என்று சொல்லாத அளவிற்கு முன்பதிவிற்கான பஸ்களை இணைத்து கொண்டது தமிழக போக்குவரத்து துறை.
இதனால், பயணிகள், ஆம்னி பஸ்களைவிட, அரசு பஸ்களை நாடி வர துவங்கிவிட்டனர்.. அந்த அளவிற்கு அரசு சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.. இப்படிப்பட்ட சூழலில்தான், ஆம்னி பஸ்ஸூம் தன் அதிரடியை காட்ட களமிறங்கிவிட்டது. பயணிகளின் வசதிக்காகவே, புதிய வியூகங்களையும் கையில் எடுத்துள்ளது.
சுற்றுச்சூழல்: சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் டீசல் செலவை குறைக்கும் வகையில், அடுத்த ஒரு வருடத்திற்குள் தமிழகத்தில் 300 பேட்டரி பஸ்களை இயக்க ஆம்னி பஸ் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளார்களாம்..
இதுகுறித்து ஒரு சேனலுக்கு, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் சொல்லும்போது, "எரிபொருள் செலவு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீண்ட கால செலவும் குறைவு என்பதால், பேட்டரி வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பேட்டரி பஸ்களை பதிவு செய்ய, தமிழக வட்டார போக்குவரத்து அதிகாரிகளான ஆர்டிஓக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
பேட்டரி பஸ்கள்: அடுத்த வருடம் ஜூலைக்குள், பேட்டரியில் இயங்கும், 300 ஆம்னி பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். பேட்டரி தொழில்நுட்பத்தால், 50 சதவீதம் எரிபொருள் செலவு குறையும். வரி விலக்கு சலுகையால், ஆண்டுக்கு ஒரு பஸ்சுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். மணிக்கு 90 கிமீ வேகத்தில் செல்லலாம். பேட்டரி பஸ்ஸில், ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்டால், கிட்டத்தட்ட 300 கிமீ வரை செல்ல முடியும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி: அந்தவகையில், ஆம்னி பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது, மிகுந்த மகிழ்ச்சியை பயணிகளுக்கு ஏற்படுத்தி வருகிறது. இதனால், எந்தவித சிரமமும் இல்லாமல், பொதுமக்களும் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications