Exclusive சென்னையில் திடீரென விரிசல் விடும் வீடுகள்.. வெள்ளம் வேலையை காட்டுகிறதா? மக்கள் அச்சம்
சென்னை: சென்னையில் திடீரென ஒரு வீட்டில் தரையில் டைல்ஸ் கற்கள் பெயர்ந்து வந்ததால் அந்த வீட்டினர் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
சென்னை சூளைமேடு பகுதியில் ஒருவீட்டில் திடீர் திடீரென டைல்ஸ் கற்கள் உடைந்ததாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து தகவல் சேகரிக்க அந்த வீட்டை சேர்ந்த இந்திரா என்பவரிடம் ஒன் இந்தியா சார்பில் பேசினோம்.

அப்போது அவர் கூறுகையில் சென்னை சூளைமேடு பெரியார் பாதை மீன் மார்க்கெட்டுக்கு அருகே கெங்கை அம்மன் கோயில் பக்கத்தில் நான் முதல் தளத்தில் வசித்து வருகிறேன். வீட்டில் குழந்தைகள் நாளை தேர்வுக்காக இன்று மதியம் படித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வீட்டில் இருந்து கீழே என்னை அழைத்தார்கள் என்பதற்காக கீழே சென்றேன். அங்கு பேசிக் கொண்டிருந்த போது திடீரென அந்த குழந்தைகள் அலறி அடித்துக் கொண்டு வந்தனர். உடனே என்னவென கேட்ட போது டைல்ஸ் உடைவதாக தெரிவித்தனர். நான் பதறி அடித்துக் கொண்டு போய் பார்த்த போது எனது வீட்டின் டைல்ஸ் உடைந்து பெயர்ந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
அது போல் கீழ் தளத்தில் உள்ள வீட்டில் ஏதோ உடைவது போல் சப்தம் மட்டும் கேட்டதாக தெரிவித்தனர். இது ஏன் நடந்தது என தெரியவில்லை. கணவர் வந்ததும் போலீஸுக்கு போவது குறித்து முடிவு எடுக்கவுள்ளோம். சென்னை பெருவெள்ளத்தின்போது என் வீட்டில் இடுப்பு அளவு நீர் தேங்கி அது பின்னர் வடிந்தது என இந்திரா தெரிவித்திருந்தார். அது போல் கீழ் வீட்டில் உள்ளவர்கள் யாரும் சீலிங்கில் ஆணி அடிப்பதோ, டிரில்லிங் செய்வதோ செய்யவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
சென்னையில் மிக்ஜாம் புயலின் போது மழை வெள்ளத்தால் சென்னையின் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் தேங்கியது. இதனால் சூளைமேடு, அரும்பாக்கம், அண்ணாநகர், முகப்பேர், அம்பத்தூர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பு அளவுக்கு வெள்ள நீர் சூழ்ந்தது.
பெரும்பாலான இடங்களில் முதல் தளம் வரை தண்ணீர் வந்துள்ளது. இது குறைந்தபட்சம் 2 நாட்களாவது வடிக்கப்படாமல் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இதன் தாக்கம் காரணமாக இது போல் வீடுகளில் விரிசல் ஏற்பட்டதா என தெரியவில்லை. இதுகுறித்து நிபுணர்கள் யாரேனும் ஆய்வு நடத்தி என்னவென தெரிந்தால் மட்டுமே விளங்கும். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications