நிலக்கரி, பெட்ரோல் டீசலை தவிருங்க.. அப்பதான் புவிவெப்பமாவதை தடுக்கலாம்.. பூவுலகின் நண்பர்கள் இயக்கம்
சென்னை: அனல் மின் நிலையம், போக்குவரத்து ஆகிய துறைகளே புவிவெப்பமயமாதலுக்கு முக்கிய காரணங்கள் என பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் வெற்றிச் செல்வன் தெரிவித்துள்ளார்.
பூவுலகின் நண்பர்கள் (Friends of Earth)இயக்கமானது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினைகளை கையில் எடுத்து அதற்காக போராடி வருகிறது. எட்டு வழிச் சாலை, சுற்றுச்சூழல் தாக்க வரைவு, காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம், காலநிலை மாற்றம் உள்ளிட்டவைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது.

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் வெற்றிச் செல்வன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டி கேள்வி பதில் வடிவில்:
கே: சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 நகரங்கள் 3 மீட்டர் ஆழத்திற்கு கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன
ப: 1980 ஆம் ஆண்டுகளில் இருந்தே புவி வெப்பமயமாதலை கேள்விப்பட்டு வருகிறோம். பூமி சூடாகி வருகிறது. இதன் காரணமாக காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. புவி வெப்பமாவதன் காரணமாக ஆர்டிக் மற்றும் அன்டார்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதனால் தண்ணீரின் அளவு அதிகமாகிறது. இதனால் கடல் மட்டத்தின் அளவானது உயர்ந்து கொண்டே இருக்கிறது. இது போல் நிகழும் போது கடல் மட்டத்தை விட உயரம் குறைவாக உள்ள நிலப்பகுதிகள் உள்ளே போய்விடும். இதுதான் இயல்பு, எனவே தாழ்வாக இருக்கும் பகுதிகள் கடலுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. நாசாவின் ஆய்வானது முதல் ஆய்வு அல்ல. அதற்கு முன்பாகவே பல்வேறு ஆய்வுகள் வெளியாகியுள்ளன. அண்மையில் 2018ஆம் ஆண்டு Central Climatic Centre என்ற அமைப்பு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.
இந்த அறிக்கையில் 2030 - 2040 ஆம் ஆண்டுக்குள் கடலின் நீர் மட்டம் உயர்வதால் பல பகுதிகள் மூழ்கும் ஆபத்து உள்ளதாக சொல்லியுள்ளார்கள். எந்த காலகட்டத்தில் எந்த அளவுக்கு இதெல்லாம் நடக்கும் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வந்துள்ளன. நாசா இந்த நூற்றாண்டின் முடிவில் இது போல் நிகழும் என சொல்லியுள்ளது. பூமியின் தட்பவெப்பநிலையி்ல எந்த அளவுக்கு மாற்றம் ஏற்படுகிறது, அதன் காரணமாக பனி எந்த அளவுக்கு உருக்கம் இருக்கும், இதன் காரணமாக கடல் மட்டம் எந்த அளவுக்கு இருக்கும் என சொல்லியுள்ளது. பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் கடல் மட்டம் உயர்வு என பார்த்தால் 3 அடி முதல் 7 அடி வரை உயர வாய்ப்புள்ளது. அப்படி நிகழும் பட்சத்தில் பல நிலப்பரப்புகள் கடலுக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்டவை எல்லாம் கடலில் மூழ்கக் கூடிய ஆபத்து இருக்கும் பகுதிகள். கூடுதலாக டெல்டா பகுதிகள், கிருஷ்ணா கோதாவரி பகுதிகள் உள்ளிட்ட டெல்டா பகுதிகள் இவையெல்லாமும் கடலுக்குள் மூழ்குவதற்கான ஆபத்து இருக்கின்றன. இந்த ஆபத்தை எதிர்நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறோம்.
கே: புவி வெப்பமயமாதலை தடுக்க ஐநா எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறதா
ப: 1980 களிலேயே புவி வெப்பயமாதல் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துவிட்டார்கள். 1991 ஆம் ஆண்டு பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக ஐநா ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கினார்கள். பருவநிலை மாற்றத்திற்கான ஐ நா குழுவின் ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக 1997 இல் கைட்டோ புரோட்டோகால் என்ற ஒப்பந்தம் வந்தது. இந்த இரு ஒப்பந்தங்களும், "காலநிலை மாற்றம் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதை தடுக்க நிறைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாடுகள் தாமாக முன் வந்து பசுமை இல்ல வாயுக்களான கார்பன், மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்ற வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும்" என்ற அளவில் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அமெரிக்கா தொடக்கத்திலிருந்தே இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துக் கொண்டுதான் வந்தது. இந்த இரு ஒப்பந்தங்களுமே காலாவதியான பிறகு 2016 ஆம் ஆண்டு பாரீஸில் இன்னொரு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.
மற்ற இரு ஒப்பந்தங்களும் வெறும் ஆலோசனைகளை மட்டுமே சொல்லியுள்ளன. ஆனால் இந்த பாரீஸ் ஒப்பந்தமானது இலக்கை நிர்ணயித்தது. இதில் "பூமியின் தட்பவெப்பநிலை கண்டிப்பாக உயரக் கூடும். அதை எந்தளவுக்கு உயரவிடலாம் என்பதை பார்க்கும் போது 1.5 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு உயர்ந்தால் நம்மால் சமாளிக்க முடியும். இதுவும் ஆபத்தானதுதான், எனினும் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருந்தது. இனி வரும் காலங்களில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு உயரத்தான் போகிறது. அதற்குள் வெப்பநிலையை வைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இது 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் சென்றால் மிகவும் ஆபத்தாகிவிடும்" என அந்த ஒப்பந்தம் சொல்லியதோடு அதற்கு நாம் என்னவெலாம் செய்ய வேண்டும் என்பதையும் அந்த ஒப்பந்தம் சொல்லியுள்ளது.
இன்னும் உள்ள 10 ஆண்டுகளில் உலக நாடுகளில் இருந்து வெளியேறக் கூடிய பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை 50 சதவீதமாக குறைக்க வேண்டும். 2050 ஆம் ஆண்டுக்குள் அதை ஜீரோவாக்க வேண்டும். கார்பன் வெளியேற்றமே இருக்கக் கூடாது. அப்படியான ஒரு நிலை வந்தால் மட்டும்தான் பூமியின் வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அளவுக்கு நம்மால் கட்டுப்படுத்த முடியும். இதை பின்பற்றுமாறு ஐக்கிய நாடுகள் முன் வைக்கிறார்கள். இந்த ஆலோசனைகளின்படி உலக நாடுகள் நடந்து கொள்கிறார்களா என்றால் ஏமாற்றமே விஞ்சுகிறது. கொரோனா காலத்தில் கூட பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் அதிகமாகவே உள்ளது.
கே: புவிவெப்பமயமாதலுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கை பலனை தருகிறதா?
ப: இந்தியாவை பொருத்தமட்டில் 2016 ஆம் ஆண்டு பாரீஸ் ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திட்ட பின்னர் பசுமை இல்ல வாயுக்களை இந்த அளவுக்குத்தான் வெளியிடுவோம் என ஒவ்வொரு நாடுகளும் அளவை நிர்ணயித்துக் கொள்ளலாம். அந்த வகையில் இந்தியா 2030-ஆம் ஆண்டுக்குள் 30 சதவீதம் அளவுக்கு பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்போம் என இந்தியா வாக்குறுதி அளித்தது. புவி வெப்பமயமாதலுக்கு அடிப்படை காரணமாக இருப்பதே நிலக்கரிதான். அப்படியென்றால் நிலக்கரியை சார்ந்திருக்கக் கூடிய அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியே வர வேண்டும். இதற்கு மாற்று என்றால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்தான் (renewable energy).
இந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி பயணம் செய்வதற்கான முன்னெடுப்புகளை இந்தியா செய்து கொண்டிருக்கிறது. மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்த போது புவிவெப்பயமாதல் பிரச்சினையை எதிர்கொள்ள 12 திட்டங்களை அவர்கள் வகுத்தார்கள். இதையடுத்து வந்த பாஜக அரசு 2 திட்டங்களை அந்த 12 திட்டங்களுடன் சேர்த்தது. இதை தவிர்த்து கூடுதல் செயல்பாடுகள் இந்தியாவில் இல்லை. இது போதாது. 2019 ஆம் ஆண்டு ஐஐடி கான்பூர் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டார்கள். அதில் ஒட்டுமொத்தமாக காலநிலை மாற்றம் பிரச்சினையால் இந்தியாவில் எந்த மாதிரியான பிரச்சினைகள் உருவாகும் என்பதை கூறியுள்ளார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய அளவில் புவியின் வெப்பம் 1 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்கிறார்கள். இந்தியாவுக்கான பருவநிலைக்கான மாதிரி என்பதே கிடையாது என்கிறது அந்த ஆய்வு. இந்தியாவில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகளை செய்கிறோம். இவையும் பூமி வெப்பமயமாதலுக்கானதுதான்.
இந்தியாவில் புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக இருப்பது தெர்மல் மின் நிலையம், போக்குவரத்து ஆகிய இரு துறைகள்தான். இந்த இரு துறைகளிலிருந்து பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும். நிலக்கரியை சார்ந்துள்ள மின் உற்பத்தியை முற்றிலும் தடை செய்ய வேண்டும். ஹைட்ரோகார்பன், மீத்தேன், பெட்ரோலியம், ஆயில் கேஸ் ஆகிய தொழில் துறைகளில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். போக்குவரத்து என்பதை முழுக்க முழுக்க எலக்ட்ரிக்கல் வாகனங்களை சார்ந்து இருக்க வேண்டும். இதையெல்லாம் நாம் செய்ய இன்னும் தயாராக இல்லை.
நமது உற்பத்தி என்பது சூழலியல் சார்ந்து பருவநிலை மாற்றத்தை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும். அதிக மழை, வெள்ளம், வறட்சி, வெப்பம், குளிர் ஆகியவற்றை தடுக்க இயற்கை சார்ந்த பகுதிகளை (Ecologically sensitive areas)பாதுகாக்க வேண்டும் என ஐநா அறிவுறுத்துகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகள், அலையாத்தி காடுகள், மன்னார் வளைகுடா பகுதியில் பவள பாறைகள், ஈரநிலங்கள் உள்ளிட்டவை நமக்கு அரணாக இருந்து நமக்கான பாதிப்புகளை குறைக்கும். ஈஐஏ 2020, சூழலுக்கு எதிரான உற்பத்திகள் எல்லாம் வெப்பநிலை உயருவதை தடுப்பதற்கு முரணாக உள்ளது. வரும் பட்ஜெட்டில் காலநிலை மாற்றத்தை காக்க ஏதேனும் நிதி ஒதுக்கீடு, கொள்கைகளை கொண்டு வருகிறார்களா என பார்ப்போம் என்றார் வெற்றிச் செல்வன்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications