எக்ஸிட் போல் சொன்னது என்ன.. தமிழக தேர்தல் ரிசல்ட் என்ன? சரியாக கணித்தது யார்.. இதோ பாருங்க
சென்னை: தேர்தல் காலம் என்றாலே கருத்து கணிப்புகளுக்கு தனி எதிர்பார்ப்பு வந்துவிடும். சில நேரங்களில் கருத்துக்கணிப்புகள் பொய்யாக போனாலும் கூட, பெரும்பாலும் மக்களின் மனதில் என்ன இருக்கிறதோ அந்த டிரெண்ட் அப்படியே எதிரொலிக்க தவறுவதில்லை.
அதாவது நம்பர் வித்தியாசம் இருக்கலாம் ஆனால் எண்ண ஓட்டம் எது என்பதை கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் மிகச் சரியாக பிரதிபலித்து வந்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாகவும், தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
அத்தாரு.. உத்தாரு.. மொத்தமா வழிச்சுட்டுப் போயிருச்சே.. எல்லாத்துக்கும் காரணம் அந்த "ஹோஹோய்"தான்!
கருத்துக் கணிப்புகள்
இந்தியா டுடே, ஏபிபி மற்றும் சி ஓட்டர், ரிபப்ளிக் டிவி என பல்வேறு அமைப்புகள் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டு இருந்தன. இப்போது தேர்தல் முடிந்துவிட்டது. ரிசல்ட் வந்துவிட்டது. கருத்துக்கணிப்பு முடிவுகளும், உண்மையான தேர்தல் முடிவுகளும் எந்த அளவுக்கு ஒத்துப்போகின்றன? எந்த கருத்துக்கணிப்பு தேர்தல் முடிவுகளுக்கு மிக நெருக்கமாக அமைந்து உள்ளது என்பது பற்றி அறிந்துகொள்ளும் ஆவல் உங்களுக்கு இருக்கும். இதோ அந்த டேட்டா உங்களுக்காக தரப்பட்டுள்ளது. இங்கே கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம்.
ரிபப்ளிக் டிவி
திமுக கூட்டணி 159 இடங்களையும் அதிமுக கூட்டணி 75 இடங்களையும் வென்றுள்ளன. இதை கிட்டத்தட்ட ரிபப்ளிக் மற்றும் சிஎன்எக்ஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் படம் பிடித்துக் காட்டியுள்ளன. ரிபப்ளிக் டிவி கருத்துக் கணிப்பின்படி அதிமுக கூட்டணி 62 தொகுதிகள் வரை வெல்ல கூடும் என்றும், திமுக கூட்டணி 165 இடங்கள் வரை வரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இவர்கள் கணித்ததை விட அதிமுக சற்று அதிகமாக தொகுதிகளை அதிமுக வென்று இருக்கிறது. ஆனால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஐந்து தொகுதிகளை வெல்ல கூடும் என்று ரிபப்ளிக் சேனல் கூறியிருந்தது. அந்த விஷயத்தில் தேர்தல் ரிசல்ட் ஒத்துப்போகவில்லை.
சி ஓட்டர்
ஏபிபி-சி ஓட்டர் கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணிக்கு 176 இடங்கள் வரை கிடைக்கும், அதிமுக கூட்டணிக்கு 64 தொகுதிகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு தொகுதி, மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதி என்று இதில் கணிக்கப்பட்டு இருந்தது. ஏறத்தாழ இந்த முடிவுகள் சரியாகத்தான் வந்துள்ளன. கோவில்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் தினகரன் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர்கள் வெல்வார்கள் என்று இந்த கருத்துக் கணிப்பு நினைத்திருக்கலாம்.
சாணக்கியா
ரங்கராஜ் பாண்டேவின் சாணக்கியா சேனல் திமுக கூட்டணி 121 தொகுதிகளில் வெல்ல கூடும் என்றும், அதிமுக கூட்டணி 113 தொகுதிகளில் வெல்ல கூடும் என்றும் கணித்து இருந்தது. அதாவது இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று அடித்து சொன்னது. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் அப்படி இருந்தாலும் ரிசல்ட் முடிவில் அப்படி இல்லை. இந்த விஷயத்தில் ரிபப்ளிக் மற்றும் சி ஓட்டர் ஆகிய இரண்டும் ஏறத்தாழ சரியாக கணித்து உள்ளன என்று சொல்லலாம்.
இந்தியா டுடே
பொதுவாக சரியாக கணிக்க கூடிய இந்தியா டுடே ஆக்சிஸ் மற்றும் மை இந்தியா கருத்துக்கணிப்பு முடிவுகள் இந்த முறை திமுகவுக்கு 185 தொகுதிகளை வாரி வழங்கின. அதிமுகவுக்கு 46 தொகுதிகள்தான் கிடைக்கும் என்று தெரிவித்தன. இதற்கும் உண்மையான ரிசல்ட்டுக்கும் நடுவே நிறைய வேறுபாடுகள் இருப்பதை பார்க்க முடிகிறது.