எழில்மிகு கோவை, மாமதுரை.. சிங்கார சென்னைபோல் “அதிரி புதிரி” திட்டம்! பட்ஜெட்டில் பிடிஆர் அறிவிப்பு
சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரங்களான கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் திட்டமிட்ட வளர்ச்சியை மேற்கொள்வது இன்றியமையாதது ஆகும்.
சென்னை: சென்னையின் வளர்ச்சிக்காக சிங்கார சென்னை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை போல் அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டின் நகரங்களான கோவை மற்றும் மதுரையிலும் சிறப்பு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக பட்ஜெட்டில் அறிவித்து உள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று சட்டசபையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2023 - 2024 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார். அந்த வகையில் நகர்புற வளர்ச்சித்துறைக்கான பல்வேறு திட்டங்களை அவர் அறிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து சட்டசபையில் பேசிய அவர், "நகர்ப்புற உள்ளாட்சிகளைத் தரம் உயர்த்தியதன் காரணமாக, அருகிலிருக்கும் புறநகர்ப் பகுதிகளும் அவற்றோடு இணைக்கப்பட்டுள்ளன. அவற்றிலுள்ள மண்சாலைகளைத் தரம் உயர்த்துவது அவசியமாகும்.

மண் சாலைகள் தரம் உயர்வு
இப்பகுதிகளில், 4,540 கி.மீ. நீளமுள்ள மண் சாலைகளில், 1,633 கி.மீ. மண் சாலைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்கெனவே உள்ளாட்சி அமைப்புகளால் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டில், 1,424 கிமீ. மண் சாலைகள், மொத்தம் 1,211 கோடி ரூபாய் செலவில் தரமான சாலைகளாக மேம்படுத்தப்படும்.

பொதுக் கழிப்பறைகள்
நகர்ப்புர உள்ளாட்சிகளில் பொதுக் கழிப்பறைகளின் செயல்பாட்டையும் பராமரிப்பையும் மேம்படுத்த அரசு முயற்சிகளை எடுத்து வருகின்றது. பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிய பொதுக் கழிப்பறைகள், சமுதாயக் கழிப்பறைகள் கட்டுதல், இயங்கி வரும் கழிப்பறைகளைச் சீரமைத்தல், அவற்றின் பராமரிப்பு ஆகிய பணிகள் 430 கோடி ரூபாய் செலவில் அரசு - தனியார் பங்களிப்பு மூலம் ஒரு முன்னோடித் திட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திறந்தவெளி திரையரங்கம்
இதன் வெற்றியின் அடிப்படையில், மாநிலத்தில் உள்ள பிற மாநகராட்சிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். நகரங்களில் உருவாக்க அரசு பல முன்னெடுப்புகளைச் செய்து வருகின்றது. சென்னைத் தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில், இயற்கை வனப்புடன் நகர்ப்புற பொதுச் சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம், உணவகங்கள் போன்ற நவீன நகர்ப்புற வசதிகளை 50 கோடி ரூபாய் செலவில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்தும்.

பொழுபோக்கு மையங்கள்
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் பொழுதுபோக்கு மையங்கள் உருவாக்கப்படும். இந்த மையங்களில் விளையாட்டு உடற்பயிற்சிக் கூடம், தொழிற்பயிற்சி வழங்க பல்நோக்கு சமுதாயக்கூடம், நூலகம் போன்ற வசதிகள் அமைக்கப்படும். வரும் ஆண்டில் 20 கோடி ரூபாய் செலவில் கண்ணகி நகர், பெரும்பாக்கம், நாவலூர், அத்திப்பட்டு இந்த மையங்கள் உருவாக்கப்படும்.

எழில்மிகு கோவை, மாமதுரை
சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரங்களான கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் திட்டமிட்ட வளர்ச்சியை மேற்கொள்வது இன்றியமையாதது ஆகும். ஆகவே இந்த 2 நகரங்களையும் அதனை சுற்றி உள்ள பகுதிகளையும் உள்ளடக்கிய அனைத்து மக்களின் பங்களிப்புடன் எழில்மிகு கோவை மற்றும் மாமதுரை என்ற ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்படும்.

திட்ட அறிக்கை
பசுமையான பூங்காக்கள், தூய்மையான தெருக்கள், அனைவருக்கும் சுத்தமான குடிநீர், பாதுகாப்பான போக்குவரத்து அமைப்புகள், தொழிற் பூங்காக்கள், தரமான வீட்டு வசதி போன்றவைகள் இத்திட்டங்களின் கீழ் இடம்பெறும். தலா ஒரு கோடி ரூபாய் செலவில் இத்திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்." என்றார்.












Click it and Unblock the Notifications