“பேஸ் டிடெக்டர்..” நீட் ஆள்மாறாட்டத்தை தடுக்க நவீன தொழில்நுட்பம்! ஹைகோர்டில் சிபிஐ கொடுத்த ஐடியா
சென்னை: பேஸ் டிடெக்டர் போன்ற நவீன கருவிகளை கொண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளை தடுக்கலாம் என்று சிபிஐ உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்து இருக்கிறது.
நீட் தேர்வு ஆள்மாற்றத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக கூறி கேரளாவை சேர்ந்த ரசீத் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு ரசீத் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி மாணவர்கள் பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு என் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சிபிஐ பதில் மனு
என்னிடமும் விசாரணை நடத்தப்பட்டது. எனக்கு ஜாமீன் வழங்கிட உத்தரவிட வேண்டும்." என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி நிர்மல் குமார் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது சிபிஐ பதில் மனுவை தாக்கல் செய்தது.

வீடியோ பதிவு
அந்த மனுவில், "நீட் தேர்வு நடைபெறும்போது தேர்வு மையங்கள் ஒவ்வொன்றிலும் வீடியோ பதிவு செய்திட வேண்டும். தேர்வு மையத்தின் கண்காணிப்பாளர் தேர்வு எழுதும் மாணவரின் புகைப்படம் மற்றும் தேர்வு மைய அனுமதி சீட்டின் புகைப்படத்தை முறையாக சரிபார்க்க வேண்டும்.

பேஸ் டிடெக்டர்
கண்விழித்திரையை பதிவு செய்திட வேண்டும். அதேபோல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போதும், தேர்வு மையத்தில் தேர்வு எழுத செல்லும்போதும், மருத்துவ கலந்தாய்வின்போதும் கைரேகை பதிவு செய்வதை முறைப்படுத்திட வேண்டும். அதேபோல் பேஸ் டிடெக்டர் கருவியை பயன்படுத்தி ஆள்மாறாட்டத்தை தடுக்கலாம்.

தேர்வு மைய எண்ணிக்கை
இதுபோன்ற நவீன கருவிகளையும் மென்பொருட்களையும் பயன்படுத்தி நீட் தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கலாம். நீட் தேர்வு நடைபெறும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து சோதனை நடைபெறும் முறைகளை எளிதாக்கி கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனையடுத்து தீர்ப்புக்காக நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications