காது மடல் ஓட்டைகளுக்கு ஆபரேஷன்! சென்னை நட்சத்திர ஹோட்டலில் தங்கிய மும்பை இன்ஸ்டா பிரபலம் கைது!
சென்னை: ஹோமியோபதி மருத்துவம் பயின்றுவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்ததாக மும்பை பெண், தனது உதவியாளருடன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் பிரபல உணவகம் உள்ளது. இங்கு ஒரு அறையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த பூனம் லலிதா சர்மா(52) என்பவர் ஹோமியோபதி மருத்துவம் படித்துவிட்டு காது தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக தெரிகிறது.

இவர் ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்தியதுடன் அறுவை சிகிச்சையும் செய்து வந்தார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்கக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் பூனம் லலித் சர்மா ஆங்கில மருத்துவம் பயிலவில்லை என தெரியவந்தது. ஹோமியோபதி மருத்துவம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் செய்து வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீஸார் வழக்குப் பதிவு செய்து லலித் சர்மாவையும் அவரது உதவியாளர் சவுகார்பேட்டையை சேர்ந்த ஷில்பாவையும் கைது செய்தனர்.
பூனம் லலித் சர்மா, ஊசி போடுவது, காயங்களுக்கு தையல் போடுவது, அறுவை சிகிச்சை, காது மடல்களில் உள்ள ஓட்டைகளை அடைப்பது போன்ற சிகிச்சைகளை செய்து வந்தார். இவர் நாக்பூர் ஹோமியோபதி கல்லூரியில் படித்துள்ளார். இவருக்கு மும்பை நரிமன் பாயிண்ட் என்ற இடத்தில் ஒரு கிளீனிக் உள்ளது.
இவர் ஊர் ஊராக காது மடல் அறுவை சிகிச்சைக்காக சென்று அங்குள்ள ஹோட்டலில் தங்கி சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. இவர் இன்ஸ்டா பிரபலம். இவரை 10 ஆயிரம் பேர் வரை பின்தொடர்கிறார்கள்.
இது தொடர்பாக அவர் 800-க்கும் மேற்பட்ட வீடியோக்களை தனது இன்ஸ்டா பதிவில் பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் 15-க்கும் அதிகமான நகரங்களில் கிட்டத்தட்ட 5000 பேருக்கு சிகிச்சை அளித்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications