தோஷத்திற்கு பரிகாரம் நகையை கழற்று... மருத்துவ மாணவியிடம் நடித்து ஏமாற்றிய போலி கைது
தோஷத்திற்கு பரிகாரம் செய்வதாக கூறி இளம் பெண்ணிடம் நகை பறித்துக்கொண்டு மாயமான போலி சாமியாரை தாம்பரம் காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை: உனக்கு பிரச்சினை இருக்கு தோஷத்திற்கு பரிகாரம் செய்தால் சரியாகிவிடும் என்று கூறி மருத்துவ மாணவியிடம் பத்து சவரன் நகைகளை ஏமாற்றி வாங்கிக்கொண்டு எஸ்கேப் ஆன போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
பெண்களை ஏமாற்றி நகை பறிப்பதையே வேலையாகக் கொண்டவன் சுரேஷ் குமார். ஆம்பூரைச் சேர்ந்த இந்த நபர் பெண்கள் அசந்த நேரத்தில் நகைகளை ஆட்டையைப் போடுவதில் கில்லாடி. சுரேஷ் குமார் மீது எட்டு மோசடி வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டவராம்.
இந்த நபர்தான் மீண்டும் சித்த மருத்துவ மாணவியை ஏமாற்றி 10 சவரன் நகையை ஏமாற்றி வாங்கிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.
போலி சாமியார்கள், ஏமாற்றுப்பேர்வழிகள் பற்றி பல விழிப்புணர்வு செய்திகளை எழுதினாலும் நிறைய படித்த பெண்களே ஏமாந்துதான் போகின்றனர்.

போலி சாமியார்
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தாம்பரத்தில் உள்ள சித்த மருத்துவக்கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15ஆம் தேதியன்று சொந்த ஊருக்கு சென்று விட்டு பேருந்தில் திரும்பினார். அப்போது சாமியார் போல தோற்றத்தில் இருந்த நபர் வந்து பேச்சு கொடுத்தார்.

பட்டை பட்டையாய்
நீங்க அவரோட பொண்ணுதானே... என்று கேட்டு தந்தையின் பெயரைக்கூறவும் அந்த பெண்ணும் நம்பிவிட்டார். காரணம் நெற்றியில் பட்டையும் நிறைய குங்குமத்துடன் இருக்கவே, நல்லவர் என்று நம்பிவிட்டார். உனக்கும் ஒரு பிரச்சினை இருக்கு தோஷம் கழித்தால் சரியாகி விடும் என்றும் கூறினார். நன்றாக படிக்கலாம் கிரேட் வாங்கலாம் என்றும் தெரிவித்தார் அந்த சாமியார்.

கோவிலுக்கு வா
சாமியார் கூறியதை உண்மை என்று நம்பிய மாணவியும் அவர் பேசுவதை கேட்க ஆரம்பித்தார். என் நண்பரின் மகள் என்பதால் உனக்கு பரிகாரம் செய்கிறேன் என்றும் கூறினார். அந்த பரிகாரம் முடிந்த உடன் உனக்குள் இருக்கும் கெட்ட சக்திகள் எல்லாம் காணாமல் போய்விடும் என்று கூறி ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரச்சொல்லவே அதை நம்பி போனார் அந்த மாணவி.

நகை கொடு வைக்கிறேன்
பரிகாரத்தின் போது மாணவியிடம் இருந்த நகையை பார்த்த சுரேஷ் குமாருக்கு கை அரிப்பெடுக்க ஆரம்பித்து விட்டது. சினிமா படத்தில் நகைகளை மைக்ரேவேவ் அவனில் வைக்கச் சொல்லி ஆட்டையைப் போட்ட சந்தானம் போல நகையை கழற்றிக்கொடுக்கச் சொல்லி கேட்டார். மாணவியும் பத்திரமாக இருக்கட்டும் என்று கழற்றி கொடுக்கவே அதை வாங்கிக்கொண்டு எஸ்கேப் ஆக்விட்டார்.

நகையோடு மாயம்
பத்தி சூடம் வாங்கப்போன சாமியார் அப்படியோ நகையோடு எஸ்கேப் ஆகிவிடவே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த மாணவி, தாம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சிசிடிவி கேமரா மூலம் போலீசார் ஆய்வு செய்ததில் சுரேஷ் குமார் பற்றி தெரியவந்தது. இதனையடுத்து மாயமான சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications