போலி பேராசிரியர்கள் மோசடி.. தவறு செய்தால் நடவடிக்கை! கல்லூரிகளுக்கு பறந்த நோட்டீஸ்.. ஆளுநர் அதிரடி
சென்னை: பேராசிரியர்கள் முறைகேடாக பணியில் சேர்ந்த விவகாரத்தில் தொடர்புடைய கல்லூரிகள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர் என் ரவி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 224 தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவது வெளிச்சத்திற்கு வந்தது. பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பணிபுரிந்தது போல போலியாக கணக்கு காட்டப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது.

AICTE எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவின் இணையதளத்தில், ஒவ்வொரு பேராசிரியருக்கும் ஒரு யுனிக் ஐடி வழங்கப்பட்டிருக்கும். அதன்படி, ஒரு கல்லூரியில் பணியாற்றும் நபர் மற்றொரு கல்லூரியில் பணியாற்ற முடியாது. ஆனால், முறையாக யுனிக் ஐடியை வழங்காமல், ஒரே பேராசிரியர் 10 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழு நேரப் பணியாளராக பணியாற்றி வருவதாக அறப்போர் இயக்கம் ஆதாரங்களை வெளியிட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. வரும் வாரத்தில் இந்த குழுவினர் முறைகேட்டில் ஈடுபட்டதாக சொல்லப்படும் பேராசிரியர்களை நேரில் அழைத்து விசாரிக்கவும், ஒரு வாரத்துக்குள் இதுதொடர்பான அறிக்கையை தாக்க செய்யவும் திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர் என் ரவி, அண்ணா பல்கலைக்கழகத்திடம் விளக்கம் கேட்டிருந்தார். இதையடுத்து, முதற்கட்ட விசாரணை அறிக்கையை அண்ணா பல்கலைக்கழகம் அளித்தது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக அறிக்கையின் அடிப்படையில் ஆளுநர் ஆர் என். ரவி, சில உத்தரவுகளை பிறப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். பேராசிரியர்கள் முறைகேடாக பணியில் சேர்ந்த விவகாரத்தில் தொடர்புடைய கல்லூரிகள் தவறு செய்து இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும். தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால் அந்த கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் போன்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications