போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை 6 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சென்னை: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக தகவல் பரப்பிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை 6 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவினருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Recommended Video
கொரோனா தொற்று பரவலைத் தடுக்க இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத நிலையில், தான் மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், முதல்வர் பழனிசாமி அனுப்பிய நோயாளிகளில் 2 பேரை குணபடுத்தியதாகவும், முதல்வர் மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றை குறித்த தவறான தகவலை சமூக ஊடகங்களில் பரப்பியதாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனை நடத்தி வந்த சித்த மருத்துவர் திருதணிகாசலம் என்பவருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, பொதுமக்களின் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வரும் திருதணிகாசலம் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை இயக்குநர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தணிகாசலத்திடம் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவுவின் சைபர் கிரைம் போலீஸார் மே 6ஆம் தேதி தகவல் தொழில்நுட்ப சட்டத்திலும், அரசுக்கு எதிராக தகவல் வெளியிட்டது மற்றும் நோய்த்தொற்று தடுப்பு சட்டத்தின் கீழும் கைது செய்து, எழும்பூர் சிறையில் ஆஜர்படுத்திய நிலையில் மே 20 வரை நீதிமன்ற காவலில் பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தனக்கு ஜாமீன் கோரி திருத்தணிகாசலம் என்ற தணிகாசலம் தாக்கல் செய்த மனு நிலுவையில் இருக்கும் நிலையில், அவரை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனுத்தாக்கல் செய்தது.
இந்த மனு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை முன்பு விசாரணைக்கு வந்தபோது, தணிகாசலத்திடம், முறையாக சித்த மருத்துவம் படித்தவரா, சிகிச்சை அளிப்பதற்கான தகுதி உள்ளதா என்பன உள்ளிட்ட பல கோணங்களில் விசாரிக்க வேண்டியுள்ளதால் 7 நாள் காவல் வழங்க வேண்டுமென வாதிடப்பட்டது.
அப்போது பூந்தமல்லி கிளை சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் ஆஜரான தணிகாசலம், விசாரணைக்கு இதுவரை ஒத்துழைத்தது போல இனியும் நடக்க தயாராக இருப்பதாகவும், ஆனால் காவலில் செல்ல விருப்பமில்லை என கூறினார். மேலும், தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தில் இருப்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ரோஸ்லின் துரை 6 நாட்கள் தணிகாசலத்தை மத்திய குற்றப்பிரிவு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இன்று முதல் மே 18 வரை விசாரணை நடத்திவிட்டு மே 18 மாலை 6 மணிக்கு ஆஜர்படுத்த வேண்டுமென உத்தரவிட்டார். இந்த 6 நாட்களிலும் தணிகாசலத்தை அவரது வழக்கறிஞர் சந்தித்து பேசவும் அனுமதி அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications