போலீசை தாக்கும் திமுக எம்எல்ஏ? போலி வீடியோ! ஆனாலும் ஒரு நியாயம் வேணாமா? உண்மையை உடைத்த முகமது ஜூபைர்
சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக எம்எல்ஏ ஒருவர் காவல்துறை உதவி ஆய்வாளரை சரமாரியாக தாக்குவதாக வடமாநிலங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. ஆனால் இந்த தகவல் போலியானது என பத்திரிகையாளர் முகமது ஜுபைர் விளக்கம் அளித்துள்ளார்.
தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு அசுர வளர்ச்சியை கண்டிருக்கிறதோ அதே அளவுக்கு போலியும் வேகமாக வளர்ந்து வந்திருக்கிறது. ஊடகங்களிலும் இதே நிலைதான். சோஷியல் மீடியாக்களில் ஏராளமான வீடியோக்கள் பரவி கிடக்கின்றன. ஆனால், இதில் எது போலி, எது நிஜம் என்பதை கண்டுபிடிப்பதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. இப்பிரச்னையை சரிசெய்ய ஊடகங்களில் Fact check எனும் உண்மை சரிபார்ப்பு குழுக்கள் செயல்பட தொடங்கியுள்ளன.

இவை போலியான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள் போன்றவற்றை அடையாளம் கண்டு மக்களிடம் கூறுகின்றன. இதில் ஆல்ட் செய்தி ஊடகம் மிக முக்கியமானதாகும். இதன் இணை நிறுவனரான முகமது ஜூபைர் ஏராளமான போலி செய்திகளை அடையாளம் கண்டு கூறி வருகிறார். இந்த வரிசையில் தற்போது மற்றொரு போலி செய்தியை அம்பலப்படுத்தியுள்ளார்.
அதாவது, ஓட்டல் ஒன்றில் வெள்ளை சட்டை அணிந்திருக்கும் நபர் ஒருவர், காவல்துறையைச் சேர்ந்த அதிகாரியை சரமாரியாக தாக்குகிறார். இதில் நிலை குலைந்த அதிகாரி அதே இடத்தில் சரிந்து விழுகிறார். இந்த வீடியோவை x சோஷியல் மீடியா தளத்தில், ஷேஷ்மணி துபே என்பவர் ஷேர் செய்து அதில், “தமிழ்நாட்டின் திமுக எம்எல்ஏ மன்சூர் முகமது, காவல்துறை அதிகாரியை தாக்குகிறார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், தமிழ்நாட்டில் மன்சூர் முகமது என்கிற பெயரில் எந்த எம்எல்ஏவும் இல்லை. அதுமட்டுமல்லாது தமிழ்நாட்டு காவல்துறையினர் முழு கை சட்டை கொண்ட சீருடையை அணிவதில்லை. எனவே இது சந்தேகத்திற்கு இடமின்றி, தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் இல்லை என்று அடித்துச் சொல்லலாம். அப்படியெனில் இந்த வீடியாவில் இருப்பது யார்? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
இதற்கு பத்திரிகையாளர் முகமது ஜூபைர் விளக்கமளித்துள்ளார். அதாவது, இந்த சம்பவம் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்திருக்கிறது. வீடியோவில் காவல்துறை அதிகாரியை தாக்குபவர் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டின் பாஜக பிரமுகர் மணிஷ் பன்வார் ஆவார். இவர் ஓட்டல் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். அங்கு காவல்துறை அதிகாரிக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்திருக்கிறது. இதனையடுத்துதான் பன்வார்காவல் காவல்துறை அதிகாரியை தாக்கியுள்ளார் என்று ஆதாரங்களுடன் ஜூபைர் விளக்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications