வங்கக் கடலில் உருவானது ஃபனி புயல்.. ஆனால் தமிழகத்தை தாக்காது.. சென்னை வானிலை மையம்
Recommended Video
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபனி புயலாக மாறிவிட்டது. எனினும் தமிழகத்தை அந்த புயல் தாக்காது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் நேற்று வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று மாறியுள்ளது. இது ஃபனி புயலாக மாறும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்தது.
மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து ஃபனி புயலாக உருவெடுக்கும். இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என கூறப்பட்டிருந்தது.
புயலில் இருந்து நெல் மூட்டைகளை காக்க சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல விவசாயிகள் கோரிக்கை
வேகம்
இந்த நிலையில் புயலின் பாதை குறித்து இந்திய வானிலை மையம் கூறுகையில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. சென்னைக்கு தென் கிழக்கே 1210 கி.மீ. தொலைவில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது.
வீசக் கூடும்
இது இன்னும் 12 மணி நேரத்தில் ஃபனி புயலாக மாறும். புயல் 30-ஆம் தேதி மாலை வட தமிழகம்- தெற்கு ஆந்திரம் இடையே கடற்கரை பகுதியை நெருங்கும். புயலின்போது மணிக்கு 120 கி.மீ- 145 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.
தீவிர புயல்
இந்த நிலையில் இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபனி புயலாக மாறியது. இது நாளை தீவிர புயலாக மாறும்.
கடலுக்குள் செல்ல வேண்டாம்
ஏப்ரல் 30-ஆம் தேதி கடல் கொந்தளிப்பாக காணப்படும். எனவே இன்றும் நாளையும், ஏப்ரல் 30, மே 1 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். ஏப்ரல் 30-ஆம் தேதி புயலானது வடதமமிழகம்- தெற்கு ஆந்திரம் இடையே நெருங்கி வரும். தற்போதைய நிலவரப்படி இந்த புயலால் தமிழகத்தை தாக்காது. சென்னை அருகே கரையை கடப்பதற்கு வாய்ப்பு குறைவுதான் என்றார் பாலச்சந்திரன்.