மு.க.ஸ்டாலின் உளறி கொண்டு இருக்கிறார்... சொல்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ
சென்னை: திமுக காங்கிரஸ் கூட்டணியால் ஒரு தாக்கமும் ஏற்படாது. அதனால், தி.மு.கவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் லாக்கர் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிப் பயன்பாட்டைத் தொடங்கி வைத்த பின் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது : காங்கிரசுடனான கூடா நட்பு கேடாய் முடிந்தது என்று கருணாநிதி கூறியதை செல்லூர் ராஜூ சுட்டிக்காட்டினார். தி.மு.கவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டதாகவும், அதன் காரணமாக ஸ்டாலின் உளறி கொண்டு இருப்பதாகவும் கூறினார்.
மேலும், மகம் நட்சத்திரத்தில் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியது என்றும், ஜெட் வேகத்தில் அதிமுக சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார். இன்னும் வியக்கத்தக்க ஆச்சரியத்தை எல்லாம், எங்கள் கூட்டணி கொடுக்க இருப்பதாவும் தெரிவித்தார்.
முன்னதாக, நாடாளுமன்ற தேர்தலில், கடந்த முறை மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த அதிமுக, இந்த முறை இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜூ குறிப்பிட்டு இருந்தார். மேலும், தேர்தல் கூட்டணி வேறு, கொள்கை கூட்டணி வேறு என்றும் அவர் விளக்கமளித்தார்.