ஓய்வூதிய திட்டம்: முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா.. தேர்தல் நேரத்தில் மைலேஜ் ஏற்றும் திமுக!
சென்னை: உறுதியளிக்க ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பாராட்டு விழா நடத்த, அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தங்களுக்கான மைலேஜ் ஏற்றிக்கொள்ளும் வகையில் இந்த விழாவை திமுக தரப்பு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கட்டங்களாக போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

இதையடுத்து, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களின் 23 ஆண்டு கால கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு நிகரான பலன்களை அரசு ஊழியர்கள் பெறுவார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமணம் முன்பணம் 10,000 ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக ஏற்கெனவே உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன்பணம் 40 லட்சத்தில் இருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
ஓய்வூதிய பணிக்கொடை 20 லட்சத்தில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீடு ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பெண் அரசு அலுவலர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக, அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்படும்.
அரசு அலுவலர்கள்பணிக்காலத்தில் இறக்க நேரிட்டால் பணிக்காலத்திற்கு ஏற்ப 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஸ்வீட் நியூஸாக புதிய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதை வரவேற்றுள்ள அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், ஏற்கனவே அறிவித்திருந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெற்றன.
தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதை ஜாக்டோ ஜியோ முழு மனதோடு வரவேற்பதாக தெரிவித்தது. இதற்காக, தமிழகம் முழுதும் உள்ள ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் சார்பில், முதல்வருக்கு நன்றி. எங்களின் 23 ஆண்டு கால பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தனர்.
ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியான உடனே, ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர்கள் சென்னை தலைமைச் செயலகத்திற்கு விரைந்தனர். அங்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து, தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். மிகுந்த மகிழ்ச்சியுடன் முதலமைச்சருக்கு இனிப்பு ஊட்டிய நிர்வாகிகள், தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை நிறைவேற்றிய அரசுக்குத் தங்களின் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடத்த, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்களது 23 ஆண்டுகால போராட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தீர்வு கண்டுள்ளதால் அரசு ஊழியர்கள் பிரமாண்டமாக பாராட்டு விழாவை நடத்த முடிவு செய்துள்ளனர்.
தேர்தல் நேரம் என்பதால், திமுக தரப்பு இந்த பாராட்டு விழாவை விரைவாகவே நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தலைநகர் சென்னையில் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் நடக்கும் பாராட்டு விழாவில், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்டாயம் பங்கேற்க அழைப்பு விடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications