விஜய் காலில் விழுந்து கதறினேன்.. பிரயோஜனம் இல்லை.. எல்லாத்துக்கும் புஸ்சி தான் காரணம்.. அஜிதா ஆக்னல்
சென்னை: சென்னையில் நடைப்பயிற்சி சென்ற போது விஜய்யின் காலில் விழுந்து கதறினேன் ஆனாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. இறுதியாக அவரைச் சந்திக்க முயன்றபோது அவர் காரின் கண்ணாடியைக் கூட இறக்காமல் சென்றது தனக்கு மிகுந்த மனவேதனையையும் உயிர் பயத்தையும் ஏற்படுத்தியது என்று தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த அஜிதா ஆக்னல் கூறியுள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல் அண்மையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இதையடுத்து இன்று திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அஜிதா ஆக்னல் அடுக்கடுக்கான புகார்களை கூறினார். எல்லாத்திற்கும் புஸ்சி ஆனந்த் தான் காரணம் என்றும் அவர் குற்றச்சாட்டு வைத்தார். அஜிதா ஆகன்ல் கூறியதாவது:-

பெரிய அவமானம் இழைக்கப்பட்டது
தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தீவிரமாகப் பணியாற்றி வந்தேன். ஆனால் கட்சியின் தலைமை மற்றும் நிர்வாகச் செயல்பாடுகள் சரியில்லை. தனது குடும்பமே நீண்டகாலமாகத் தலைவர் விஜய் அவர்களின் ரசிகர் மன்றப் பணிகளில் ஈடுபட்டு வந்தது. அவரது அழைப்பின் பேரில் தனது அரசுப் பணியைக் கூடப் பொருட்படுத்தாமல் கட்சிப் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டேன்.
கட்சியில் பெண்களுக்கு உரிய அங்கீகாரமும் பாதுகாப்பும் இல்லை. மாவட்ட நிர்வாகியாக இருந்தும் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டேன். குறிப்பாக, கல்வித் திருவிழாவின் போது தலைவர் தன்னுடன் பேசிக்கொண்டிருந்த நேரலையை உள்நோக்கத்துடன் துண்டித்தது தனக்கு பெரிய அவமானம் இழைக்கப்பட்டது. தனது உழைப்பிற்கான அங்கீகாரத்தைக் கோரி பலமுறை தலைவரைச் சந்திக்க முயன்றேன். ஆனால் அது மிகவும் கடினமான ஒன்றாகவே இருந்தது.
விஜய்யின் காலில் விழுந்தேன்
இறுதியில் ஒரு நாள் தலைவர் விஜய் அவர்களின் நடைப்பயிற்சி நேரங்களில் அவரைச் சந்தித்துத் தனது கோரிக்கைகளை முன்வைத்தேன். அப்போது ஒருகட்டத்தில் அவரது காலில் விழுந்து கண்ணீர் மல்க நீதி கேட்டேன்.. ஆனால், அதற்கு உரியப் பதில் கிடைக்காததுடன், இறுதியாக அவரைச் சந்திக்க முயன்றபோது அவர் காரின் கண்ணாடியைக் கூட இறக்காமல் சென்றது தனக்கு மிகுந்த மனவேதனையையும் உயிர் பயத்தையும் ஏற்படுத்தியது.
பணத்திற்காக இயங்கவில்லை
கட்சியில் பதவிகள் வழங்கப்படுவதில் முறைகேடுகள் நடப்பதாகவும், உண்மையாக உழைப்பவர்களுக்கு மதிப்பு இல்லை. தன்னைப் பற்றித் தவறான வதந்திகள் பரப்பப்பட்ட நிலையில், தனது களப்பணியைக் கவனித்த திமுக தலைமை தமக்கு அழைப்பு விடுத்தது. பணத்திற்காகவோ அல்லது பதவிக்காகவோ தான் இயங்கவில்லை. தனது சமூகத்தின் அடையாளத்திற்காகவும் மக்கள் சேவைக்காகவும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தேன்.
இனிவரும் காலங்களில் தமிழகத்தின் கடலோரக் கிராம மக்களின் உரிமைகளுக்காகவும், அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காகவும் திமுகவில் இணைந்து உண்மையாகப் பணியாற்றுவேன்.. என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications