சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை! போதை வாலிபர் கைது
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சதீஷ்குமார் என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலை தேடி வந்த சதீஷ்குமார் மருத்துவமனை வளாகத்தில் போதையில் படுத்து இருந்ததும், பின்னர் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. சென்னையில் உள்ள மிகப்பிரபலமான அரசு மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாகும். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தினமும் நோயாளிகள் மற்றும் அவர்கள் உறவினர்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதான பெண் நோயாளி ஒருவருக்கு மதுபோதையில் வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த விவரங்கள் வருமாறு:-
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டில் 50 வயதான பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவரிடம் திடீரென ஒரு நபர் மதுபோதையில் அத்துமீறியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த பெண் கத்தி கூச்சலிட்டார். இதைக் கவனித்த அங்கிருந்த நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கீழ்ப்பாக்கம் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உடனடியாக அவரை கைது செய்தனர்.
விசாரணையில், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் ராணிப்பேட்டையை சேர்ந்த சதீஷ் குமார் என்பது தெரியவந்தது. இவர் வேலை தேடி வந்துவிட்டு மருத்துவமனை வளாகத்தில் போதையில் படுத்துள்ளார். அப்போதுதான் திடீரென நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
கைதான சதீஷ்குமார் மீது பாலியல் தொல்லை, பெண் வன் கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே மருத்துவமனையில் புத்தாண்டு நாளன்று மதுபோதையில் வந்த இளைஞர் ஒருவர், மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் மருத்துவ மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் தான் தற்போது, மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்குள்ளே சென்று நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனை வளாகத்திற்குள் சம்பந்தம் இல்லாத நபர்கள் வருகை தருவதை தடுக்க வேண்டும் என்றும் முறையான பதிவேடுகள் பராமரித்து நோயாளிகளின் உறவினர்கள் வருகையை கண்காணிக்க வேண்டும் எனவும் அப்போதுதான் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முடியும் என்று பொதுமக்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications