அடேங்கப்பா! டாஸ்மாக் வருவாய் ரூ. 50,000 கோடியாக எதிர்பார்ப்பு.. நிதித்துறை செயலாளர் நா.முருகானந்தம்
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதித் துறைச் செயலாளர் நா.முருகானந்தம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
தமிழ்நாடு பட்ஜெட் நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மூன்றாவது பட்ஜெட்டான இதை, நிதியமைச்சர் பிடிஆர் நேற்று தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்தார்.
இதில் சோழ அருங்காட்சியகம், காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், கோவை- மதுரை மெட்ரோ, பதிவுக் கட்டணம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது.

தமிழ்நாடு பட்ஜெட்
குறிப்பாகப் பலரும் எதிர்பார்த்த குடும்பத் தலைவிகளுக்கான மாதம் 1000 ரூபாய் செப். மாதம் முதல் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து நிதித் துறைச் செயலர் நா.முருகானந்தம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "ஒட்டுமொத்தாக பார்த்தால், ரூ.3,65,321 கோடியில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் தமிழக அரசின் வருவாய் 10.2% வரை உயரும் என எதிர்பார்க்கிறோம். குறிப்பாக முத்திரைத் தீர்வை, மாநில ஜிஎஸ்டி 19.3 சதவீதம் வரை உயரும் என்றே எதிர்பார்க்கிறோம்.

ஜிஎஸ்டி இழப்பீடு
ஜிஎஸ்டி இழப்பீடு என்ற முறையில், ரூ.20 ஆயிரம் கோடி வரை தமிழக அரசுக்கு வந்து கொண்டு இருந்தது. இருப்பினும், கடந்த ஜூன் மாதத்துடன் இதை நிறுத்திவிட்டார்கள். இதனால் நடப்பாண்டிலேயே மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய ரூ.15 ஆயிரம் கோடி குறைந்துவிட்டது. அதேபோல வரும் ஆண்டிலும் ரூ.20 ஆயிரம் கோடி வரை வருவாய் குறையும் என்றே எதிர்பார்க்கிறோம். ஆனால், அதேநேரம் அரசின் வருவாயும் 10.2 சதவீதம் உயர வாய்ப்புள்ளது.

குறையும் வருவாய்ப் பற்றாக்குறை
இதில் முக்கியமான விஷயம், வருவாய்ப் பற்றாக்குறையை நாம் தொடர்ந்து குறைக்கிறோம். வருவாய் பற்றாக்குறையே இல்லாத நிலையை உருவாக்குவதே இலக்கு.. அதிகபட்சமாக 2020-21இல் வருவாய் பற்றாக்குறை ரூ.62 ஆயிரம் கோடியாக அதிகரித்தது. இது 2021-22ஆம் ஆண்டில் ரூ.46,538 கோடியாக குறைக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு அது மேலும் குறைக்கப்பட்டு ரூ.30,476 கோடியாக இருக்கும் ஒரே ஆண்டில் ரூ.16 ஆயிரம் கோடி குறைத்துள்ளோம். இது நல்ல முன்னேற்றம். அதேபோல நிதிப் பற்றாக்குறை மாநிலத்தின் ஜிடிபியில் 3 சதவீதம் இருக்க வேண்டும்.

முக்கியத்துவம்
இந்தாண்டு திறன்வளர்ப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். ஐடிஐ-க்களை மேம்படுத்தும் பணி ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், 54 பாலிடெக்னிக் கல்லூரிகளை மேம்படுத்த ரூ.2,800 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர் திறன் மேம்பாட்டுக்காக உலகத் திறன் மையம் அமைக்கப்பட இருக்கிறது. அதேபோல கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம். கோவை, மதுரையில் மெட்ரோ அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் பூங்காக்கள், ஜவுளிப் பூங்காக்கள், தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இலவச வைஃபை, ரூ.1,000 கோடியில் வடசென்னை வளர்ச்சித் திட்டம் எனப் பல அறிவிப்புகள் இருந்தன.

பதிவுக் கட்டணம்
நலிவுற்றவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சிறப்புத் திட்டம், காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த அறிவிப்புகளும் உள்ளன. அனைத்து பிரிவினருக்கும் நல்ல திட்டங்களைத் தரும் பட்ஜெட்டாக இது உள்ளது. நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் பதிவுக் கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பட்ஜெட்டில் நீர்வளத் துறைக்கு ரூ. 8,632 கோடியும், சுற்றுலாத் துறைக்கு ரூ.355 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் வருவாய்
அதேநேரம் மத்திய அரசிடமிருந்து ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.4,500 கோடியும் உணவுத் துறைக்கு ரூ.4,000 கோடியும் வர வேண்டியுள்ளது. டாஸ்மாக் வருவாய் வரும் நிதியாண்டில் ரூ.50 ஆயிரம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். கடந்தாண்டு டாஸ்மாக் மூலம் ரூ.36 ஆயிரம் கோடியும் நடப்பாண்டில் ரூ.45 ஆயிரம் கோடியும் அரசுக்குக் கிடைத்துள்ளது. வரி வருவாய் அதிகரித்து செலவுகளைக் குறைத்ததால் நிதிநிலையில் முன்னேற்றம் உள்ளது. அதேபோல பதிவுகள் அதிகரிப்பால் ரூ.2,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

பெட்ரோல் டீசல் வருவாய்
பெட்ரோல் டீசல் மூலம் ரூ.23,486 கோடி கிடைத்துள்ள நிலையில், வரும் நிதியாண்டில் இது ரூ.26,304 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். நடப்பாண்டில் ரூ.72 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ள நிலையில், இம்மாத இறுதிக்குள் ரூ.3 ஆயிரம் கோடி வாங்குவோம். இது மத்திய அரசின் வரம்பான ரூ.84 ஆயிரம் கோடிக்குள் தான் இருக்கிறது. அரசின் திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறைக்கப்படாமல், சீர்திருத்தங்கள், திறன் மேம்பாடு மூலம் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications