177.25 டிஎம்சி அல்ல! டெக்னிகலாக உச்சரிக்காத ஆனந்த்! Decimal System கிளாஸ் எடுத்த சபாநாயகர்!
சென்னை: காவிரி நீர் திறந்து விடும் அளவு குறித்து பேசிய போது அமைச்சர் புஸ்ஸி ஆனந்துக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் வகுப்பெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டசபையில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், " காவேரி நதிநீர் விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், நமது மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நதிநீர் உரிமைகளையும் காப்பதில் இந்த அரசு துளியும் சமரசம் செய்து கொள்ளாது என்பதை இப்பேரவையில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கர்நாடகாவின் தற்போதைய முதலமைச்சர் அவர்கள் மேகதாது பிரச்சினையைச் சமீபத்தில் எழுப்பிய உடனேயே, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் (25-05-2026 அன்று) அரசு தலைமை வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசித்து இப்பிரச்சினையை குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி அறிவுறுத்தினார்கள்.
அதோடு நிற்காமல் நமது மாண்புமிகு முதல்வர் அவர்கள் அடுத்த நாளே (26-05-2026) தனது கடிதத்தின் வாயிலாகவும், 27-05-2026 அன்று மாண்புமிகு இந்திய பிரதமரை நேரில் சந்தித்தும் மேகதாது திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்க வேண்டாம் என மீண்டும் வலியுறுத்தினார்.
2018 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டிற்கு உறுதி செய்யப்பட்ட 50% நம்பகத்தன்மை கொண்ட 740 டிஎம்சி தண்ணீர் பங்கீட்டை எந்த ஒரு புதிய நடுவர் மன்றமும் மாற்ற முடியாது. எனவே, கர்நாடகா தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய 177.25 டிஎம்சியில் எந்த மாற்றமும் ஏற்படாது. புதிய நடுவர் மன்றம் அமைவதால் தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதை இப்பேரவைக்கு மிக உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன், நன்றி வணக்கம்!"
(அமைச்சர் பேசும்போது தண்ணீரின் அளவை தவறாகக் குறிப்பிட்டதால் அவையில் சலசலப்பு ஏற்படுகிறது. அப்போது பேரவைத் தலைவர் குறுக்கிட்டார்.)
மாண்புமிகு பேரவைத் தலைவர்: "மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசுகிற போது, '117.25' என்று சொன்னதை '177.25' என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதை அப்படியே அவைக்குறிப்பில் எடுத்துக் கொள்ளலாம் என்றார்.
அதாவது நூற்று பதினேழு புள்ளி இருபத்தி ஐந்து என சொல்லக் கூடாது. நூற்று பதினேழு புள்ளி ரெண்டு ஐந்து என சொல்ல வேண்டும் என சபாநாயகர் திருத்தினார். அப்போது ஆனந்தின் முகம் மாறியது. உடனே, ஓ ரெண்டு அஞ்சி என கூறி அமர்ந்தார்.
Decimal System-ல் புள்ளிக்கு பிறகு இருக்கும் எண்களை தனித்தனியாகவே படிக்க வேண்டுமே தவிர அதை நம்பர் சிஸ்டத்தில் வரும் வார்த்தைகளை போல் படிக்கக் கூடாது என்பதுதான் விதி. அதைத்தான் சபாநாயகர் திருத்தினார்.
மேலும் சபாநாயகர் பேசுகையில், இந்த மேகதாது பிரச்சினையைப் பற்றி பாரதிய ஜனதா கட்சி உட்பட அவையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஏகமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். அதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லாமல், எதிர்கருத்தும் இல்லாமல் எல்லாக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்து, 'ஏற்போரே அதிகம், மறுப்போர் இல்லை' என்று ஏகமனதாகச் சொல்லிய பிறகு... இனி இந்த மாமன்றத்தில் அந்தத் தீர்மானம் மற்றும் மேகதாது பற்றிப் பேசுவதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்! மற்ற விஷயங்களைப் பற்றி மட்டும்தான் பேச முடியும். அதை நான் உறுதியாகச் சொல்கிறேன். மேகதாது பிரச்சினைக்கு ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, அதைப் பற்றிப் பேசுவதற்கு இனி அனுமதி இல்லை." என திட்டவட்டமாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications