திமுக எம்பி கலாநிதி வீராசாமி மகன் மீது மோசடி - எஸ்சி - எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு
சென்னை: வடசென்னை திமுக எம்பி கலாநிதி வீராச்சாமியின் மகன் சித்தார்த், சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ராணி, கலாநிதி வீராசாமியின் உதவியாளர் ஆசை தம்பி மற்றும் நாராயணன் ஆகியோர் மீது சென்னை அண்ணா நகர் போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். மோசடி, எஸ்டி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் இந்த வழக்குகள் பதிவாகி உள்ளது.

வடசென்னை லோக்சபா தொகுதியில் 2வது முறையாக எம்பியாக இருப்பவர் கலாநிதி வீராசாமி. இவரது மகன் பெயர் சித்தார்த். சித்தார்த் இன்னும் அரசியலுக்கு என்ட்ரி கொடுக்கவில்லை. அவர் ரியல் எஸ்டேட் தொழில் சார்ந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் சித்தார்த்துக்கு சென்னையில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த உடன் அவர் மீது சென்னை அண்ணா நகர் போலீசார் பல்வேறு பிரிவுகளில் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதாவது கரூர் மாவட்டத்தை சேர்ந்த அன்பரசு (வயது 27) என்பவர் அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அன்பரசு கடந்த 2024ம் ஆண்டில் சென்னை அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். அதில் அண்ணா சாலையில் 14 கிரவுண்ட் நிலம் மற்றும் ஒரு கட்டத்துக்கான சொத்து பத்திரத்தை வங்கியில் அடகு வைத்து பணம் தருவதாக கூறி ஏமாற்றியதாக தெரிவித்து இருந்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
கலாநிதி வீராசாமி திமுக எம்பி என்பதால் அவரது மகன் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்கியதாக அன்பரசு குற்றம்சாட்டியிருந்தார். மேலும் தன்னை ஜாதி சொல்லி திட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான் அந்த வழக்கில் தற்போது அண்ணா நகர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி மொத்தம் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிநாராயணன், சென்னை அண்ணா நகர் 102வது வார்டு திமுக கவுன்சிலர் ராணி ரவிச்சந்திரன், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமியின் உதவியாளர் ஆசைத்தம்பி, மற்றும் கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மீது எஸ்சி, எஸ்டிக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பிரிவுகள் 3 (1)(r), 3 (1)(s) 3 (1)(va), 420 (மோசடி), 506 (1) கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications