உத்தரப் பிரதேசத்தில் கொழுந்துவிட்டு எரியும் தீ! சம்பள பிரச்சனையில் தொழிலாளர்கள் ஆவேசம்!
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தொழிலாளர்களுக்கு மிகவும் அடிப்படை ஊதியம்தான் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது போர் காரணமாக விலைவாசி அதிகரித்திருக்கும் நிலையில் கூடுதல் சம்பளம் கேட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். போராட்டம் வன்முறையாக வெடித்திருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சி உச்சத்தை தொடுகிறது என்று பாஜகவினர் கூறி வரும் நிலையில், தற்போது போராட்டங்களால் நொய்டா வன்முறை பூமியாக மாறியிருக்கிறது.

காரணம் என்ன?
சமீபத்தில் ஹரியானா அரசு, 35% சம்பள உயர்வை அறிவித்தது. இதன் காரணமாக அங்கு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.14,000லிருந்து, ரூ.19,000 ஆக அதிகரித்த்து. ஆனால் பக்கத்து மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் அடிப்படை சம்பளம் ரூ.13,000 என்கிற அளவிலேயே இருக்கிறது. ஏற்கெனவே போர் காரணமாக விலைவாசி எகிறியிருக்கிறது. இப்படி இருக்கையில் சம்பள உயர்வு அறிவிக்கப்படாததால் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
தொழிலாளர் போராட்டம்
ஆரம்பத்தில் அமைதியாகத் தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டம், பின்னர் காவல்துறையினருடன் மோதலாக மாறியது. போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீவைத்து, கற்களை வீசி சேதப்படுத்தினர். நிலைமையைக் கட்டுப்படுத்த கவுதம் புத் நகர் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருக்கின்றனர். நொய்டாவின் ஃபேஸ்-2வில் உள்ள ஹோசியரி காம்ளக்ஸ், செக்டர் 60 பகுதிகளிலும் தீவைப்பு, கல்வீச்சு மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன.
மாவட்ட ஆட்சியர் சமாதானம்
இந்த சம்பள இடைவெளி, நொய்டாவின் பெரிய தொழில்துறை பகுதிகளில், குறிப்பாக ஹோசியரி காம்ப்ளக்ஸ் மற்றும் ஆயத்த ஆடைகள் போன்ற அதிகத் தொழிலாளர்கள் தேவைப்படும் துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த வன்முறைச் சம்பவங்கள் நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாக, மாவட்ட ஆட்சியர் மேதா ரூபம், தொழிலாளர் நலன்கள் தொடர்பாக உயர் மட்டக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
அந்தக் கூட்டத்தில், கூடுதல் நேரம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம், ஆண்டு போனஸ், வார விடுமுறைகள் மற்றும் மேம்பட்ட பணியிட பாதுகாப்பு போன்ற தொழிலாளர் நலன்கள் பற்றிப் பேசப்பட்டது.
வேலைக்கு ஆகாத சமாதானம்
இந்த விஷயத்தில் தொழிலாளர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். உதவி தேவைப்பட்டால் தொடர்புகொள்ள, கட்டுப்பாட்டு அறை எண்களையும் (120-2978231, 120-2978232, 120-2978862, 120-2978702) அவர் வெளியிட்டார். இருந்தபோதிலும், நீண்ட நாட்களாகக் கிடப்பில் உள்ள கோரிக்கைகள் தீர்க்கப்படாததால், தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர் போராட்டம்
நொய்டாவில் நடந்த இந்த வன்முறைச் சம்பவங்கள், ஹரியானாவின் குருகிராம் மானேசரில் நடந்த இதேபோன்ற சம்பளப் போராட்டத்தைத் தொடர்ந்தே நடந்துள்ளன. அங்கும் சம்பளம் மற்றும் வேலை நிலைமைகள் தொடர்பான போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் சொத்துக்களைச் சேதப்படுத்தியதுடன், போலீஸ் வாகனத்துக்கு தீவைத்து எரித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 56 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications