கொரோனா வைரசுக்கு இன்று வயது 1.. இந்தியாவில் கால் வைத்து 10 மாதம்
சென்னை: உலகையே பயமுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு, இன்றுடன் ஓராண்டு ஆகிறது.
உலகில் முதல் முறையாக, சீனாவின் ஹுபே மாகாணத்தில் 2019ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி கோவிட்-19 வரைஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
51 வயது நபரிடம் முதல் முறையாக கோவிட்-19 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இந்த தகவல் வெளியாகாமல் இருந்தது. ஆனால், தெற்கு சீனா மார்னிங் போஸ்ட் ஊடகம் கடந்த மார்ச் மாதம் இந்த தகவலை உறுதி செய்தது.
இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி
அதேநேரம், சீனாவோ, உலகின் வேறு பகுதியிலும் கொரோனா வைரஸ் பரவியிருந்திருக்க கூடும். ஆனால் சீனாதான் முதலில் வெளியே சொன்னது என்று வாதிட்டு வருகிறது. ஜனவரி 30ம் தேதி, இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டது. திருச்சூரைச் சேர்ந்த மாணவர் சீனாவிலிருந்து கேரளா திரும்பியிருந்த நிலையில், கோவிட்-19 வகை வைரசால் அவர் பாதிக்கப்பட்டதை கண்டறிந்தனர் மருத்துவர்கள்.
இந்தியாவில் முதல் கொரோனா பலி
இந்தியாவில் கொரோனாவால் முதல் முறையாக மார்ச் 12ம் தேதி 76 வயது கர்நாடக முதியவர் இறந்தார். கல்புர்கி என்ற நகரைச் சேர்ந்தவர் அந்த முதியவர். இதன்பிறகு கொரோனா வேகமாக பரவத் தொடங்கியது.
முழு லாக்டவுன்
கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் 24ம் தேதி, தொலைக்காட்சியில் தோன்றி, மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை நாடு முழுக்க முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். இந்த 21 நாட்களில் கொரோனா பரவல் நின்றுவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், மக்கள் முழு ஒத்துழைப்பு தரவில்லை. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு போலீசாருக்கு தெரியாமல் இடம் பெயர வேண்டிய சூழ்நிலை எழுந்தது. எனவே பிறகு கொரோனா மேலும் பரவியது.
கொரோனா புள்ளி விவரம்
லாக்டவுனால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால், அடுத்தடுத்து தளர்வுகளை அரசு அறிவித்து பொருளாதார நடவடிக்கைகளை தொடருகிறது. இந்தியாவில் இதுவரை 88,74,291 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,30,519. நமது நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 82,90,371. உலகமே கொரோனா தடுப்பூசிக்காக ஆவலோடு காத்திருக்கிறது.