செம ட்விஸ்ட்.. முதல்முறையாக இப்படி ஒரு அதிரடி கருத்தை சொன்ன ரஜினிகாந்த்.. பின்னணி என்ன?
சென்னை: முதன்முறையாக, இன்று ரொம்பவே வெளிப்படையாக, ஒரு கருத்தை, பொது வெளியில், ஆழமாக பதிவு செய்து உள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, "காவி வண்ணம் பூச நடைபெறும் முயற்சிக்கு, திருவள்ளுவரும் சிக்க மாட்டார், நானும் சிக்க மாட்டேன்.." என்று தடாலடியாக அறிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வந்தவர் ரஜினிகாந்த். இதனால் அவர் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது போன்ற ஒரு தோற்றம் நிலவி வந்த நிலையில், இன்று அவர் அளித்துள்ள இந்த பேட்டி அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்துத்துவா அரசியல்
தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலின்போது தனிக்கட்சி துவங்கி தேர்தலை சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளார் ரஜினிகாந்த். தனது அரசியல் ஆன்மீக அரசியல் என்று அவர் தெரிவித்தாலும், தெரிவித்தார்.. பாஜக முன்னெடுத்து வரக்கூடிய இந்துத்துவா அரசியலுடன் இது எதிர்க்கட்சியினரால் இணைத்து பேசப்பட தொடங்கியது. அன்று முதலே ரஜினிகாந்தின் ஒவ்வொரு செயலும் இந்துத்துவா கொள்கையுடன் இணைத்து, எதிர்க்கட்சியினர் விமர்சனத்துக்கு உள்ளாகத் தொடங்கியது.

மோடி பலசாலி
சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, ரஜினிகாந்த் நிருபர்களிடம் பேசுகையில், "ஒருவருக்கு எதிராக பலர் இணைந்து கூட்டணி அமைத்து உள்ளார்கள் என்றால், அந்த ஒருவர் பலசாலியா? அல்லது இணைந்துள்ள பலரும் பலசாலியா?" என்று கேள்வி எழுப்பி, நரேந்திர மோடி தான் பலசாலி என்பதை மறைமுகமாக தெரிவித்தார். இது ஒரு வகையில் பாஜகவுக்கு ரஜினி கொடுத்த வாய்ஸ் என்று அரசியல் பார்வையாளர்களால் சொல்லப்பட்டது.

ரஜினி முதல் வாய்ஸ்
1996 ஆம் ஆண்டு முதல் முறையாக ரஜினிகாந்த், அரசியலில் வாய்ஸ் கொடுத்தார். "இனிமேல் ஜெயலலிதா முதல்வரானால், ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது" என்று ரஜினி அப்போது கூறியபோது, அது திமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற பெரிதும் கை கொடுத்தது. அதிமுக அத்தேர்தலில், படுதோல்வியை சந்தித்தது. ஆனால், இந்த லோக்சபா தேர்தலின்போது, தமிழகத்தில் ரஜினிகாந்த் மறைமுகமாக கொடுத்த வாய்ஸ் எடுபடவில்லை. மாறாக, தேனி என்ற ஒரு தொகுதியை தவிர மற்ற அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் பாஜக-அதிமுக கூட்டணி தோல்வியைத் தழுவியது.

வெற்றியை தந்த ஆம்பூர்
அடுத்ததாக, நடைபெற்ற வேலூர் லோக்சபா, இடைத்தேர்தலை எடுத்துக்கொண்டாலும், அங்கு பாஜக-அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏசி சண்முகத்தால் வெற்றி பெற முடியவில்லை. தனிப்பட்ட வகையில் பெரும் செல்வாக்கு கொண்ட அவரால் கூட, அங்கே வெற்றி பெற முடியாததற்கு காரணம், வாணியம்பாடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வாக்காளர்களில் பெரும்பாலானோர், திமுகவுக்கு ஆதரவாக இருந்தது தான். இது, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய பகுதியாகும். முஸ்லீம்கள் கணிசமாக உள்ள ஆம்பூரிலும் திமுகதான் அதிக வாக்குகளை பெற்றது. எனவேதான் வெற்றிக்கு அருகே வந்த போதிலும் கூட ஏ.சி.சண்முகத்தால் வெற்றிக்கனியை பறிக்க முடியவில்லை.

ஒரு சுற்றில் மட்டும் பின்னடைவு
இதோ, இப்போது நடைபெற்ற நாங்குநேரி, சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவை பார்த்தாலும்கூட இதே பாடம் புலப்படும். நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 32 ஆயிரத்து 333 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கைகளிலும், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் முன்னிலை வகித்த போதிலும், 9வது சுற்றில் மட்டும் ரூபி மனோகரன், ஆச்சரியப்படத்தக்க வகையில், முன்னிலை வகித்தார். அந்த 9வது சுற்று வாக்கு என்பது ஏர்வாடி பகுதியில் பதிவான வாக்குகள். ஏர்வாடி பகுதி என்பது இஸ்லாமியர்கள் அதிகம் வாழக்கூடிய பகுதியாகும்.

அதிமுகவும் இப்படித்தான்
வாணியம்பாடியும் சரி, ஏர்வாடியும் சரி உணர்த்துவது ஒன்றைத்தான். இந்துத்துவாவை கையில் எடுத்தால் தமிழக மக்கள் ஆதரவு அளிப்பதில்லை என்பதற்கு இவையெல்லாம் கண்முன்னால் இருக்கக்கூடிய சான்றுகள். லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதும், இதற்கு ஒரு நல்ல உதாரணம். வேலூர் லோக்சபா தொகுதியில் எந்த ஒரு பாஜக தலைவரும் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. இதே போலத்தான் விக்கிரவாண்டி, மற்றும் நாங்குநேரியிலும் நடந்தது. இருப்பினும் அதிமுகவுடன், பாஜக கூட்டணியில் இருக்கும் ஒரே காரணத்திற்காக முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை, வாக்குப்பதிவு சதவீதம் உணர்த்தியுள்ளதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ரஜினிகாந்த் முடிவு?
இப்படியான சூழ்நிலையில்தான் ரஜினிகாந்தின் இன்றைய கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. ரஜினிகாந்தை தொடர்ந்து பாஜக ஆதரவாளராகவும், தீவிர இந்துத்துவவாதியாகவும், எதிர்க்கட்சியினர் முன்னிறுத்தினால் அது தனது அரசியல் எதிர்காலத்திற்குதான், ஆபத்தாக முடியும் என்று ரஜினிகாந்த் நினைக்கத் தொடங்கிவிட்டார். ரஜினிகாந்த்துக்கு, ஜாதி, மதம் இனம் என்பவற்றை தாண்டி ரசிகர் வட்டம் இருக்கிறது. அவர்கள் அனைவர் ஆதரவையும் பெற வேண்டுமானால், மதசார்பின்மை என்ற கோட்பாட்டில் பயணிக்க வேண்டிய கட்டாயம் சூப்பர்ஸ்டாருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல்
தமிழக சட்டசபை தேர்தல் கவுண்டவுன் கிட்டத்தட்ட தொடங்கி விட்டது. இப்போது இருந்தே, ரஜினிகாந்த் மீது விழுந்துள்ள இந்துத்துவா அல்லது பாஜக ஆதரவாளர் என்ற முத்திரையை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதை, அவரும் உணர்ந்துள்ளார். அதற்கான முதல்படியாக, இந்த அதிரடிப் பேட்டி அமைந்துள்ளது என்று, அரசியல் விமர்சகர்கள் பார்க்கிறார்கள். ரஜினிகாந்த்தின் இந்த முடிவுக்கு எந்த மாதிரி ஆதரவு கிடைக்கும் என்பது வரும் காலங்களில்தான் புலப்படும்.












Click it and Unblock the Notifications