அன்றும் ஏர்போர்ட்- 'இந்தி'க்காக மிரட்டப்பட்ட கனிமொழி- தீயாய் பரவிய 'இந்தி தெரியாது போடா' 'யுத்தம்'!
சென்னை: கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவர், இந்தி தெரியாது என்று சொன்னதற்காக மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினரால் மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை விமான நிலையத்தில் இதேபோல இந்தி தெரியாது என்பதால் கனிமொழி எம்பி மிரட்டப்பட அப்போது ஒட்டுமொத்த தமிழகமும் ஒருங்கிணைந்து 'இந்தி தெரியாது போடா' என உரத்து குரல் எழுப்பியது வரலாறு.

இந்திய தேசத்தின் விடுதலைக்கு முன்னர் இருந்தே இந்தி திணிப்பை எதிர்ப்பதில் தமிழ்நாடுதான் முன்னணியில் இருந்து வருகிறது. 1938-ம் ஆண்டு நடந்த முதலாவது இந்தி எதிர்ப்பு போர் தொடங்கி எண்ணற்ற இந்தி ஆதிக்க எதிர்ப்பு களங்களை தமிழ்நாடு கண்டிருக்கிறது. தாளமுத்து நடராசன் தொடங்கி எண்ணற்ற தமிழ் இளைஞர்கள் இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக, தாய் மொழி தமிழைப் பாதுகாக்க தங்களது இன்னுயிரை ஈந்த வரலாறு தமிழ்நாட்டு உண்டு. ஆண்தோறும் ஜனவரி 25 மொழிப் போர் தியாகிகள் நாளாக தமிழ்நாடு இன்றும் கடைபிடித்து போற்றி வருகிறது.

கோவா ஏர்போர்ட்டில்..: தற்போது கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவர் இந்தி தெரியாது என சொல்லி இருக்கிறார். மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்தவர் தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது- இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும் என மிரட்டியிருக்கிறார். இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கனிமொழி எம்பி பற்ற வைத்த நெருப்பு: இதேபோல ஒரு சம்பவம் 2020ம் ஆண்டு நிகழ்ந்தது. சென்னை விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மூத்த திமுக தலைவர் கனிமொழி எம்பியிடம் இந்தி குறித்து தகராறு செய்தார். இந்தி மொழி தெரியாததால் நீங்கள் இந்தியரா எனவும் அந்த பாதுகாப்பு படை வீரர் கேள்வி எழுப்ப கனிமொழி ட்விட்டரில் இதை அப்படியே பதிவிட்டார். அப்போதும் தமிழ்நாடும் பெரும் கொந்தளிப்பை சந்தித்தது. மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் போன்றவர்களும் கனிமொழிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை தாங்களும் எதிர்கொண்டதாக தெரிவித்தனர்.

இந்தி தெரியாது போடா: அந்த தருணத்தில் சமூக வலைதளங்களில் இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக் பல நாட்கள் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. தமிழ்நாட்டு இளைஞர்களுடன் இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கும் பிற மாநில இளைஞர்களும் இணைந்து கொண்டனர். அப்போது, இந்தி தெரியாது போடா என்ற டீ சர்ட் தமிழ்நாட்டில் பிரபலமாகியது. திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இந்தி தெரியாது போடா டீ சர்ட் அணிந்து சமூக வலைதளங்களில் படங்களைப் பகிர காட்டுத் தீ போல 'இந்தி தெரியாது போடா' முழக்கம் பற்றி எரிந்தது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.













Click it and Unblock the Notifications