பொதுக்குழு பஞ்சாயத்தால் திமுகவை விட்டே நீக்கப்பட்ட எம்ஜிஆர்- அதிமுக கட்சியே உதயமானது! Flashback
சென்னை: பொதுக்குழு விவகாரத்தை முன்வைத்து அதிமுக இன்று அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று நடந்த பொதுக்குழு செல்லுமா? ஜூலை 11-ல் நடக்கப் போகும் பொதுக்குழு செல்லுமா? வாங்க போகலாம் நீதிமன்றத்துக்கு என்று வரிந்து கட்டிக் கொண்டிருக்கின்றனர் அதிமுக தலைகள்.
Recommended Video
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற கட்சியை அதன் நிறுவனர் எம்.ஜி.ஆர். உருவாக்க பல்வேறு காரணிகள் இருந்தன. உள்ளும் வெளியேயும் ஏராளமான அரசியல் காரணங்கள் இருந்தன. இந்த விவகாரங்களில் மிக முக்கியமானதும் பொதுக்குழு பிரச்சனை என்பதுதான் காலத்தின் வினோத பொருத்தம்!

எம்ஜிஆர் கருணாநிதி
அண்ணா மறைவுக்குப் பின்னர் கருணாநிதி அக்கட்சியின் தலைவராக நடத்திய முதல் சட்டசபை தேர்தல் 1971. அத்தேர்தல் பிரசாரத்தில் எம்ஜிஆர் ஓரம்கட்டப்பட்டார். எம்ஜிஆர், அவராகவே பிரசாரம் செய்யட்டும் என்பது கருணாநிதியின் நிலைப்பாடு; கருணாநிதி தம்மை அழைக்கட்டும் என்பது எம்ஜிஆர் நிலைப்பாடு. இந்த ஊடலில் எண்ணெய் ஊற்றி ஊதிப் பெருக்கிய அரசியல் சக்திகள் எண்ணிக்கை பெரும் பட்டியலைக் கொண்டது. இந்த பஞ்சாயத்து ஓய்ந்து கருணாநிதி மீண்டும் முதல்வரானார். அப்போது எம்ஜிஆருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் கிடைக்கவில்லை. இதுதான் மெல்ல மெல்ல இருவருக்கும் இடையேயான மோதலாக விஸ்வரூபம் எடுத்தது.

எம்ஜிஆரின் சதி?
அப்போது மதுவிலக்கை தளர்த்திவிட்டு கள்ளுக்கடை, சாராயக்கடைகளை திறக்க கருணாநிதி முடிவு செய்தார். இதற்கு எதிராக அண்ணா நினைவிடத்துக்குப் போய் மது அருந்தமாட்டோம் என உறுதிமொழி எடுத்தார் எம்ஜிஆர். இன்றைய அதிமுகவின் தர்மயுத்தங்களுக்கு மூல விதையே இதுதான் எனவும் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு அடுத்ததாக திமுக அரசைக் கலைக்கும் சதி என்கிற விவகாரம் கிளம்பியது. அதில் எம்ஜிஆர் பெயரும் அடிபட்டது.

பொதுக்குழு பேச்சு
இப்படியான சூழ்நிலையில் 1972 அக்டோபர் 8-ந் தேதி திருக்கழுக்குன்றம் நிகழ்ச்சியில் பேசிய எம்ஜிஆர், திமுகவினரின் சொத்து விவகாரங்களை கிளப்பினார். திமுக தலைவர்களின் உறவினர்களின் சொத்து விவரங்கள் குறித்து பொதுக்குழு கேட்டது உண்டா? இதற்காக பொதுக்குழுவில் ஒரு தீர்மானமே கொண்டுவருவேன் என ஆக்ரோஷமாக கர்ஜித்தார். எம்ஜிஆரின் இந்த பேச்சு அவரது ஆதரவாளர்களை, எளிய தொண்டர்களை பெருமளவில் ஓரணியில் கட்டிப் போட்டது.

பொதுக்குழுவால் நீக்கம்
பொதுக்குழு தொடர்பான எம்ஜிஆரின் இந்த பேச்சு திமுகவில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. 1972 அக்டோபர் 10-ந் தேதி திமுகவின் செயற்குழு கூட்டத்தில் எம்ஜிஆரை தற்காலிகமாக நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது; 1972-ம் ஆண்டு அக்டோபர் 14-ந் தேதி திமுக பொதுக்குழுவில் மொத்தம் 320 பேரில் 277 பேர் ஒப்புதலுடன் எம்ஜிஆர் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டார். இதையடுத்து அண்ணா திமுக எனும் கட்சியே உதயமானது. அன்று எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்க காரணமாக இருந்ததும் பொதுக்குழுதான்.. அந்த எம்ஜிஆர் உருவாக்கிய அண்ணா திமுக இப்போது உடையக் காத்திருப்பதும் பொதுக்குழுவால்தான். என்னே வரலாற்று பொருத்தமோ!












Click it and Unblock the Notifications