அரசியல் பகை மறந்து விஜயகாந்த் வீடு தேடிச் சென்ற ராமதாஸ்! தேமுதிக பாமக முட்டல் மோதல் ஃபிளாஷ்பேக்!
சென்னை: அரசியலில் எதிரும் புதிருமாக ஒரு காலத்தில் வார்த்தை யுத்தம் நடத்திக் கொண்டிருந்த பாமக நிறுவனர் ராமதாசும், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பகையை மறந்து ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து மனம் விட்டு பேசிய புகைப்படம் இப்போது மீண்டும் வைரலாகி வருகிறது.
இந்தச் சூழலில் தேமுதிக பாமக இடையேயான முட்டல் மோதல் குறித்த ஃபிளாஷ்பேக் பற்றி பார்க்கலாம்.

விஜயகாந்த் தேமுதிகவை தொடங்குவதற்கு முன்னரே அவருக்கும், பாமக நிறுவனர் ராமதாசுக்கும் இடையே ஏழாம் பொருத்தம் தான். அதிலும் குறிப்பாக விஜயகாந்த் 2005ஆம் ஆண்டு கட்சி தொடங்கி தனித்து போட்டியிட்டு வட மாவட்டங்களில் பாமக ஓட்டுக்களை பிரிக்க ஆரம்பித்ததும் தேமுதிக பாமக இடையேயான வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை அடைந்தது. 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடலூர் மாவட்ட விருத்தாசலம் தொகுதியில் முரசு சின்னத்தில் தனித்து போட்டியிட்ட விஜயகாந்த், பாமகவின் சொத்து பாதுகாப்பு குழுத் தலைவர் கோவிந்தராஜை தோற்கடித்தார்.
இது பாமக தரப்புக்கு கடும் அதிர்ச்சியை அப்போது ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து 2011 சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்ட போது, பாமக தரப்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், எல்லாமே அரசியல் ரீதியான நாகரீகமான விமர்சனங்களே தனிப்பட்ட முறையில் பாமக எந்த விமர்சனத்தையும் முன் வைக்கவில்லை.
இந்தச் சூழலில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவும், தேமுதிகவும் இடம்பெற்றன. ஆனாலும் ராமதாசும், விஜயகாந்தும் அப்போது சரியாக பேசிக்கொள்ளவில்லை. இன்னும் சொல்லப் போனால் ஒரே மேடையில் பிரச்சாரம் கூட செய்யவில்லை. அதேபோல் கீழ்மட்ட அளவிலும் பாமக தொண்டர்களும், தேமுதிக தொண்டர்களும் இணக்கமாக இருந்தது போல் தெரியவில்லை.
அதைத் தொடர்ந்து 2016 சட்டமன்றத் தேர்தலின் போது மக்கள் நலக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட விஜயகாந்த், உளுந்தூர்பேட்டை தொகுதியில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு தோல்வியை தழுவினார். அந்த தொகுதியில் விஜயகாந்தை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் பாலு 2வது இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வியை தழுவினார். அந்த தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படியாக தேமுதிக, பாமக இடையேயான பகை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் பாமகவும், தேமுதிகவும் இடம்பெற்றன. அப்போது நடைபெற்ற சீட் பங்கீட்டின் போது பாமகவை விட தங்களுக்கு கூடுதல் தொகுதிகளை தர வேண்டும் என தேமுதிக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனை சாமர்த்தியமாக சமாளித்த எடப்பாடி பழனிசாமி, ராமதாஸையும், விஜயகாந்தையும் நேரில் சந்தித்து பேச வைப்பதற்கான முயற்சிகளில் இறங்கினார். அந்த முயற்சியும் பலித்தது.
கண்கள் பனித்தது, இதயம் இனித்தது என்பதற்கேற்ப பழைய பகையை மறந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது வீடுத் தேடிச் சென்று சந்தித்து நலம் விசாரித்தார் ராமதாஸ். அதேபோல் விஜயகாந்த் மறைவுக்கு ராமதாஸ் மிகவும் உருக்கமுடன் இரங்கல் பதிவு வெளியிட்டிருந்ததும், அன்புமணி நேரில் சென்று விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தியதும் நாகரீக அரசியல் பண்பாட்டுக்கு வித்திடும் வகையில் அமைந்திருந்தது.












Click it and Unblock the Notifications