வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. அடி வெளுத்து வாங்கிய மழை! சென்னையில் விமான சேவை பாதிப்பு
சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருக்கிறது. சென்னை உட்பட வட தமிழக மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது.
ஜூலை முதல் வாரம் வரை தமிழகத்தில் வெயில் வாட்டி எடுத்த நிலையில், தற்போது பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. எனவே வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை மத்திய இந்தியா வரை உள்ள நிலப்பரப்புக்கு ஆண்டின் மொத்த மழைப்பொழிவில் 70%ஐ கொடுக்கும். எனவே இதனை நம்பி கோடிக்கணக்கான விவசாயிகள் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்த வரை கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி நேற்று வரை 65% கூடுதலாக மழை பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுத்திருக்கிறது. இந்த காலங்களில் ஒட்டுமொத்தமாக சராசரியாக 206.7 மி.மீதான் மழை பொழிந்திருக்க வேண்டும். ஆனால் 341.9 மி.மீ மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக நீலகிரியில் 1168.9 மி.மீ, கோவையில் 869.3 மி.மீ என மழை பெய்திருக்கிறது. குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 50.4 மி.மீ, நாகப்பட்டினத்தில் 105.2 மி.மீ என மழை பதிவாகியுள்ளது. நாகையில் பெய்த மழை இயல்பை விட -32 சதவிகிதம் குறைவாகும். மற்ற மாவட்டங்களை விட ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்திருக்கிறது.
இப்படி இருக்கையில் அடுத்த 1 மணி நேரத்தில், அதாவது காலை 10 மணி வரை திருவள்ளூர், திருப்பூர், தேனி, திருநெல்வேலி என 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் மஞ்சள் அலர்ட் விடுத்திருக்கிறது.
மறுபுறம் கனமழை காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் நேற்று பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியிருக்கிறது. மழை காரணமாக, சென்னை விமான நிலையத்திற்கு வர வேண்டிய 9 விமானங்களும், இங்கிருந்து புறப்பட வேண்டிய 10 விமானங்களும் என, மொத்தமாக 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
அதேபோல வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால், வட தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications