கணிப்பது ஒன்று.. நடப்பது ஒன்று.. மழை முன்னறிவிப்பில் சொதப்பியதா வானிலை ஆய்வு மையம்
சென்னை: வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யும் என்று கணித்த நாளில், மழை ஏமாற்றியதும், மழை பெய்யாது எனக்கூறிய நாளில் கனமழை வெளுத்து வாங்கியும் வானிலை ஆய்வு மையத்திற்கு கண்ணாமூச்சியை டிட்வா புயல் காட்டியது. புயல் வலுவிழந்த நிலையில், அது தொடர்பாக மழை முன்னறிவிப்பிலும் வானிலை ஆய்வு மையம் மொத்தமாக சொதப்பியுள்ளது. திருவள்ளூருக்கு இன்று ரெட் அலர்ட் கொடுத்த சில நிமிடங்களில் அதையும் வாபஸ் பெற்றுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளை வைத்தே மக்கள் பொதுமக்கள் நிகழ்ச்சிகளை திட்டமிடுவதை பார்க்க முடியும். அதாவது, வெளியூர்களில் இருந்து சென்னை போன்ற நகரங்களுக்கு வர திட்டமிட்டு இருந்தால் கூட, ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டால், தங்களது பயண திட்டத்தை சில நாட்கள் ஒத்திவைப்பதை பார்க்க முடியும்.

வானிலை மைய அறிவிப்புகள்
இதனால், வானிலை முன்னறிவிப்பு என்பது மக்களின் அன்றாட செயல்பாடுகளில் கூட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொன்னால் கூட மிகையல்லதான். வானிலை பற்றிய அறிவிப்புகளை பொறுத்தவரை 100 சதவீதம் துல்லியமாக கணிக்க முடியாது என்பதே வானிலை நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அதுவும் வெப்ப மண்டல பகுதிகளில் வானிலையில் ஏற்படும் மாற்றங்களை அப்படியே கணித்துவிட முடியுமா என்பது கொஞ்சம் சவாலானது என்று சொல்கிறார்கள்.
கணிக்க தவறுகிறதா
இதனை ஏற்றுக்கொள்ளலாம் என்றால் கூட தனியார் ஆர்வலர்கள் கணிக்கும் துல்லியம் கூட வானிலை ஆய்வு மையம் கணிக்க தவறும் நிலையையே காணமுடிகிறது. குறிப்பாக நேற்று முன் தினம் இரவு, டிட்வா புயல் வலுவிழந்து சென்னைக்கு அருகே கரையை கடக்காமலே வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது. இதனால், சென்னை, திருவள்ளூருக்கு ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது.
இதனை நம்பி பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படவில்லை. கணிப்பின் படியே டிட்வா புயல் வலுவிழந்தாலும் மாறாக மிக கனமழை கொட்டி தீர்த்தது. கணிப்புக்கு மாறாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். நேற்று முழுக்க முழுக்க மழை வெளுத்து வாங்கியதால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின. இந்த நிலையில், இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
குழம்பிப் போன மக்கள்
இதேபோன்று நேற்று சென்னைக்கு அருகே மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கும் என வானிலை மையம் மாலையில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஆனால் தனியார் வானிலை ஆய்வாளர்கள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்பு இல்லை என கூறியிருந்தனர்.
இதில் தனியார் வானிலை ஆய்வாளர்கள் சொன்னபடியே இன்று காலையில் தான் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. இதனை இன்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் உறுதிபடுத்தியுள்ளது. எல்லாமே கணிப்பு என்றாலும் கூட ஒரு சில நேரங்களில் இந்த அறிவிப்பினால் மக்கள் பாதிப்படைந்து விடுகிறார்கள்.
இன்றும் ரெட் அலர்ட் வாபஸ்
இன்று தமிழகத்தில் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலையில் இருந்தே மழை கொட்டி வந்தது. இடைஇடையே சிறிது குறைந்தாலும் தூரல் மழையாக தொடர்ந்து பெய்தது. திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதையடுத்து இன்று மதியம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது.
ஆனால் சிறிது நேரம் கழித்து அதாவது 5 நிமிடத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டது. ஏற்கனவே காலையில் இருந்து பெய்து வந்த கனமழையால் மக்கள் திண்டாடி வரும் சூழலில் மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் மேலும் அச்சமடைந்து இருந்தது. ஆனால் சிறிது நேரத்தில் வாபஸ் பெறப்பட்டதால் மக்களும் சற்று குழம்பியிருந்தனர்.












Click it and Unblock the Notifications