அந்த நேரம் பார்த்து வந்த பெண் காவலர்: சரமாரியாக அடித்து உதைத்த வெளிநாட்டு பெண் கைதிகள்; புழலில் ஷாக்
சென்னை: சென்னை புழல் பெண்கள் சிறையில் செல்போன்களை பறிமுதல் செய்ததால் சிறை காவலரை வெளிநாட்டு பெண் கைதிகள் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புழல் பெண்கள் சிறையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குதான் வெளிநாட்டு கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். உகாண்டா நாட்டைச் சேர்ந்த சாண்ட்ரா (வயது 32) மற்றும் மாலத்தீவை சேர்ந்த சம்சியா(30) ஆகிய 2 வெளிநாட்டு பெண்கள், போதை பொருள் தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளனர்.
புழல் பெண்கள் சிறையில் சனிக்கிழமை இரவு பெண் சிறை காவலர் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது வெளிநாட்டு பெண் கைதிகள் இருவரும் தங்கள் அறையில் செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தனர்.

இதனை பார்த்த சிறை காவலர், இருவரையும் கையும் களவுமாக பிடித்தார். இருவரிடம் இருந்தும் செல்போன்களை பறிமுதல் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வெளிநாட்டு பெண் கைதிகள் இருவரும், பெண் சிறை காவலரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனால் அந்த பெண் காவலருக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சிறை நிர்வாகம் தரப்பில் புழல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்கள் புழல் சிறைக்கு வந்து, வெளிநாட்டு பெண் கைதிகளுக்கு சிறைக்குள் செல்போன் கிடைத்தது எப்படி? அவர்கள் யாருடன் பேசினார்கள்? எனவும், சிறை காவலரை தாக்கியது குறித்தும் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பெண்கள் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே புழல் தண்டனை சிறையில் சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த கோட்டி என்ற கோடீஸ்வரன்(37) கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்று அடைக்கப்பட்டு உள்ளார். சனிக்கிழமை இரவு தனது அறையில் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட சிறை போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்து செல்போனை பறிமுதல் செய்தனர். இதுபற்றியும் புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர். புழல் சிறையில் செல்போன்கள் கைதிகளிடம்எப்படி புழங்குகிறது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications