சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்பு .. ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற வனத்துறை முடிவு
சென்னை: சென்னை துரைப்பாக்கம் மகாலெட்சுமி நகர் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பரப்பு எனக்கூறி அப்பகுதியில் இருந்து வெளியேற்ற வனத்துறை அளித்த நோட்டீஸை ரத்து செய்ய கோரி லட்சுமி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பதில் மனுதாக்கல் செய்துள்ள தமிழக வனத்துறை, பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்பாளர்கள் வரும் நவம்பர் 22 ம் தேதி மறு குடியமர்வு செய்யப்படுவார்கள் என்று கூறியுள்ளது.
சென்னை துரைப்பாக்கம் மகாலெட்சுமி நகர் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பரப்பு எனக்கூறி வனத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.இதனை எதிர்த்து மகாலட்சுமிநகரில் உள்ள குடியிருக்கும் லட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள தமிழக வனத்துறை, சென்னை பள்ளிக்கரணையில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1725 ஏக்கர் சதுப்பு நிலத்தில் சுமார் 1085 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளதாக கூறியுள்ளது.

மகாலெட்சுமி நகர் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் வருவதால் அப்பகுதியில் உள்ள சுமார் 47 ஆக்கிரமிப்பாளர்களாக கண்டறியப்பட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.. மேலும் துரைப்பாக்கம் மகாலெட்சுமி நகர் பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்பாளர்கள் வரும் நவம்பர் 22 ம் தேதி மறு குடியமர்வு செய்யப்படுவார்கள் என்றும் வனத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் ஆக்கிரமித்துள்ள வீடுகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளிக்கரணை பிரச்சனை: வடகிழக்கு பருவமழை வரும் போது எல்லாம் பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, வேளச்சேரி, காரப்பாக்கம், பெரும்பாக்கம், பெருங்குடி உள்ளிட்ட தென் சென்னை பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இந்த பகுதிகளில் உள்ள ஆக்கிரிமிப்புகள் காரணமாவே அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படுகின்றன, நீர்வழிப்பாதைகள், நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், அங்கு போக வேண்டிய நீர் குடியிருப்புக்குள் புகுந்துவிடுகிறது. இதேபோல் நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ளதாலும், சில பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. இந்நிலையில் ஆக்கிரமிப்பு விஷயத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டி வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கியும், ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு செல்லாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். இந்நிலையில் காவல்துறை, மாநகராட்சி, வனத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ளவர்களை அகற்ற முழுவீச்சில் நடந்து வருகிறது. அந்தவகையில் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியில் முதற்கட்டமாக விதிமீறலுடன் கட்டப்பட்டுள்ள 170 வீடுகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சென்னை மாவட்ட வனத்துறை அதிகாரி சரவணன் கடந்த வாரம் கூறும் போது, பள்ளிக்கரணை பகுதியில் 1,085 ஆக்கிரமிப்பு இடங்கள் இருப்பதாக பையோ மெட்ரிக் கணக்கெடுப்பு மூலமாக கண்டறிந்திருக்கிறோம். அதன்படி, முதற்கட்டமாக டாக்டர் அம்பேத்கர் நகரில் 102 வீடுகளும், மகாலட்சுமி நகரில் 70 வீடுகளும் ஆக்கிரமித்துள்ளதை அடையாளம் கண்டு இந்த குடியிருப்புவாசிகளுக்கு இம்மாதம் இறுதிக்குள் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியிருக்கிறோம். மேலும் இவர்களுக்கு செம்மஞ்சேரியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களை அங்கு இடம்பெயர ஏற்பாடு செய்துள்ளோம். அதேபோல், அரசு நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்டவை தவிர்த்து காமாட்சி நகர், காயிதே மில்லத் நகர், ம.பொ.சி நகர், கே.பி.கந்தன் நகர் போன்ற இடங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications