சென்னையில் பயங்கர காட்டுத்தீ.. அரை கிமீ தூரம் பற்றி எரியும் பெரும்பாக்கம் சதுப்பு நிலம் - பரபரப்பு
சென்னை: சென்னை சோழிங்கநல்லூர் ஆவின் பின்புறம் உள்ள பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. சுமார் அரை கிலோமீட்டர் தூரம் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை சோழிங்கநல்லூரில் ஆவின் பால் பண்ணை அமைந்துள்ளது. இந்த ஆவினின் பின்புறம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியாக பெரும்பாக்கம் சதுப்பு நிலம் உள்ளது.

இந்நிலையில் தான் இன்று இரவு திடீரென்று சதுப்பு நிலத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இதனால் சதுப்பு நிலத்தில் இருந்த கோரைப்புற்கள், செடிகள், மரங்கள் தீயில் கருகின.
கடந்த சில நாட்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் சதுப்பு நிலத்தில் உள்ள கோரைப்புற்கள், செடி, மரங்கள் காய்ந்து போய் இருந்த நிலையில் தீயில் அவை எரிய தொடங்கின. இதுபற்றி உடனடியாக வனத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
வனத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். சதுப்பு நிலம் என்பதால் தீவிபத்து ஏற்பட்ட இடத்துக்கு உடனடியாக அவர்களால் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் தீயை அணைப்பதில் பிரச்சனை என்பது நீடித்து வருகிறது. தீவிர ஆலோசனைக்கு பிறகு அவர்கள் தீயை அணைக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையே தான் பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவுக்கு தீ பரவி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தீ மேலும் பரவுவதை தடுத்து தீயை அணைக்கும் பணியில் வனத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் இந்த தீவிபத்துக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை.
அதிகப்படியான வெப்பத்தால் சதுப்பு நிலத்தில் தீவிபத்து ஏற்பட்டதா? இல்லாவிட்டால் உயர்அழுத்த மின்அழுத்த கம்பியால் தீவிபத்து ஏதேனும் ஏற்பட்டதா? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. இதற்கிடையே தான் பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் ஏற்பட்ட தீவிபத்தை அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் செல்போன்களில் வீடியோக்களாக எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோக்கள் தற்போது பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications