ஆட்டம் ஸ்டார்ட்.. இன்று எடப்பாடி அதிமுக பொதுச்செயலாளர்! நாளை முதலமைச்சர் - அடித்து சொல்லும் வேலுமணி
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருக்கும் நிலையில், விரைவில் அவரை தமிழ்நாடு மக்கள் முதலமைச்சராக அரியணை ஏற்றுவார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "அஇஅதிமுக -வின் பொதுக்குழு தீர்மானங்களை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருப்பதன் மூலம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக் காக்கப்பட்ட மாபெரும் எஃகு கோட்டையான அஇஅதிமுகவின் பொதுச் செயலாளராக மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதற்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இது மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு கிடைத்த அங்கீகாரம். கழகத்தின் பொதுச் செயலாளராக மாண்புமிகு அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பது, ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியை தந்து உள்ளது.
மாண்புமிகு அண்ணன் திரு.எடப்பாடியார் அவர்கள் தான் மீண்டும் தமிழக முதலமைச்சராக வர வேண்டும் என தமிழக மக்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் விரோத திமுக அரசுக்கு தமிழக மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டி, அண்ணன் எடப்பாடியார் அவர்களை விரைவில் தமிழக முதலமைச்சராக அரியணை ஏற்றுவார்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றார். அதை தொடர்ந்து கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார்.
இதற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அறிவிக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். அண்மையில் இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது.
அப்போது 10 நாட்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டது. இதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், ஓபிஎஸ் தரப்பு எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் மனு வழங்கியது. கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ளதால் உடனே தன்னை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க எடப்பாடி பழனிசாமி மனு வழங்கினார்.
இந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்து உள்ளது. அத்துடன் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்களையும் ஏற்று இருக்கிறது. கடந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இடையே மோதல் வெடித்த நிலையில், ஜூலை 11 ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

உயர்நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து ஓபிஎஸ் அணி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தடை விதித்தார். இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வழக்கில் ஜூலை 11 பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்ற தீர்ப்பு கிடைத்தது.
இதற்கிடையே அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எடப்பாடி தரப்பு கூட்டிய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதை தொடர்ந்தே பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications