அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த வேல்ராஜ்.. ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட்! என்ன காரணம்!
சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றியவர் வேல்ராஜ். அவர் துணை வேந்தராகப் பதவிக்காலம் முடிந்த பிறகும் பேராசிரியராகத் தொடர்ந்து பணியாற்றி வந்தார். இன்றுடன் அவர் ஓய்வு பெற இருந்த நிலையில், திடீரென அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நிதி முறைகேடு புகாரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக பணியாற்றி வந்தவர் வேல்ராஜ். இவர் கடந்த 2021ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகள் இவர் துணைவேந்தராக இருந்த நிலையில், கடந்தாண்டு ஜூலை மாதத்துடன் இவரது பதவிக்காலம் நிறைவடைந்தது.

இவரது பதவிக்காலம் முடிந்த பிறகு புதிய துணை வேந்தரைத் தேர்வு செய்யத் தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இன்னும் புதிய துணை வேந்தர் தேர்வு செய்யப்படவில்லை. இப்போது பல்கலைக்கழகத்தை நிர்வாக குழு ஒன்றே நிர்வகித்து வருகிறது.
அதேநேரம் வேல்ராஜின் துணை வேந்தர் பதவி முடிந்த போதிலும், அவர் தொடர்ந்து தொடர்ந்து பேராசிரியராக பணியாற்றி வந்தார். இன்று அவர் பணி ஓய்வு பெற இருந்தார். இருப்பினும், அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இயந்திரவியல் துறையில் பணியாற்றியபோது எழுந்த நிதி முறைகேடு புகார் காரணமாக சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் உத்தரவின் நகலை வேல்ராஜிடம் பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் வழங்கியதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. கடைசி நாளில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், ஓய்வூதிய பலன்கள் அவருக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சஸ்பெண்ட் விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்ட பிறகே அவருக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது.
பேரிசியர் பணியில் 33 ஆண்டுகள் அனுபவம் கொண்ட வேல்ராஜ், மெக்கானிக்கல் பிஎச்டி துறையில் 3 படிப்புகளை அறிமுகம் செய்திருக்கிறார். முதுகலை பொறியியல் துறையில் 9 புதிய படிப்புகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார். அண்ணா பல்கலைக்கழக இயக்குநர், துணை இயக்குநர், துறைத் தலைவர் என 14 ஆண்டுகள் நிர்வாக பணிகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications