"உளுத்து போயிருக்கு.. கவனிங்க".. திடீரென பரபரப்பான இணையம்.. "எம்எல்ஏ கருணாநிதி" போட்ட போடு..!
கருணாநிதியின் குறிப்பை கரூர் மாவட்ட கலெக்டர் ட்வீட் போட்டுள்ளார்
சென்னை: மறைந்த கருணாநிதி, தன் கைப்பட எழுதிய ஒரு குறிப்பு இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இது குறிப்பை பார்த்து, பொதுமக்கள் அப்படியே ஆச்சரியத்தில் மூழ்கி வருகின்றனர்.
திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு வருகின்றனர்..
அந்த வகையில், கரூர் மாவட்டத்துக்கு பிரபு சங்கர் கடந்த 16ம் தேதி கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.. இந்நிலையில், நேற்று கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் வேங்காம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த மருத்துவ முகாமை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..

உடல்நலம்
அப்போது முகாமுக்கு வந்திருந்த பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கி, அதையே தானும் அருந்தினார்.. அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். பிறகு, அந்த கிராம மக்களுக்கு இதுவரை என்னென்ன டெஸ்ட்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, யாருக்காவது சளி, காய்ச்சல் இருக்கிறதா, தொற்று பாதிப்பு உள்ளதா, அவர்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சை தரப்பட்டுள்ளது? என்பது குறித்தெல்லாம் ஆய்வு மேற்கொண்டார்..!

கிராமம்
1959ம் ஆண்டு குளித்தலை எம்எல்ஏவாக கருணாநிதி இருந்திருக்கிறார்.. இந்த வேங்காம்பட்டி கிராமத்துக்கு மறைந்த கருணாநிதி வந்து போயுள்ளாராம்.. இதே பள்ளியை அப்போது ஆய்வு செய்துவிட்டும் சென்றுள்ளார். வழக்கமாக எம்எல்ஏக்கள், அதிகாரிகள் இப்படி ஆய்வு செய்ய வந்தால், அது சம்பந்தமான குறிப்புகளை அங்குள்ள பதிவேடுகளில் எழுதி வைத்து போவது வழக்கம்.. அப்படித்தான் கருணாநிதி குளித்தலை எம்எல்ஏவும் எழுதி வைத்துள்ளார். அந்த குறிப்பை, தற்போதைய கலெக்டர், தன்னுடைய ட்வீட்டில் பதிவிட்டும் உள்ளார்..

மாணவர்கள்
கருணாநிதி எழுதி வைத்த குறிப்பு இதுதான்: "இன்று வேங்காம்பட்டி ஆரம்ப பாட சாலையை பார்வையிட்டேன். இரண்டு ஆசிரியர்களும் இருந்தார்கள்... மொத்த மாணவர்கள் 107ல், இன்று வருகை தந்திருந்தவர்கள் 71 பேர்... இந்த பள்ளிக்கென கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் மேல் மரங்கள் உளுத்துப்போயிருக்கின்றன... அவை உடனடியாக கவனிக்கப்பட்டால் நலம்.. ஆசிரியர்கள் நன்கு பணியாற்றுவதாக பொது மக்கள் பாராட்டினார்கள். மாணவர்களின் சுகாதாரம் இன்னும் அதிகமாக கவனிக்கப்படுதல் நன்று" என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

வைரல்
"மு. கருணாநிதி" என்ற பெயருக்கு பின்னாடி MLA (எம்எல்ஏ) என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.. கருணாநிதியின் கையெழுத்து ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறது.. இந்த குறிப்பை அந்த பள்ளியில் இத்தனை காலமும் பத்திரப்படுத்தி வந்துள்ளது ஆச்சரியத்தை தந்துள்ளது.. இணையதளம் முழுக்க "எம்எல்ஏ கருணாநிதி"யின் இந்த கையெழுத்து வைரலாகி கொண்டிருக்கிறது..












Click it and Unblock the Notifications