வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணனிடம் "கைவரிசை” காட்ட முயன்ற மர்ம கும்பல்.. ஆன்லைனில் மோசடி முயற்சி
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் மனைவியிடம், சைபர் மோசடி செய்ய முயன்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமீப சில வருடங்களாகவே பல்வேறு வகையான நிதி மோசடி சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஆன்லைன் மூலம் பெரும்பாலான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக விழிப்புணர்வுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தாலும், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஆன்லைன் மோசடி வழக்குகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் மனைவியிடம், சைபர் மோசடி செய்ய முயன்றதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மர்ம நபர்கள், வங்கியில் இருந்து பேசுவது போல் பேசி, வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாகவும், வங்கிக் கணக்கு குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு கேட்டதாகவும், மறு முனையில் பேசிய நபர் மிரட்டும் தொனியில் பேசியதாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரமணன் அளித்த ஆன்லைன் மோசடி புகார் குறித்து தென் மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் போலீஸ் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவி சரோஜாவிடம் சைபர் மோசடி கும்பல் பணம் பறிக்க முயன்றதாக புகார் அளிக்கப்பட்டது. தன்னை மிரட்டி பணம் பறிக்க முயன்ற மோசடி கும்பல் மீது நடவடிக்கை கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் சரோஜா புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications