43 ஆண்டுக்கால சேவை! ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி சுந்தரராஜன் பத்மநாபன் சென்னையில் காலமானார்
சென்னை: இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி சுந்தரராஜன் பத்மநாபன் சென்னையில் காலமானார். 43 ஆண்டுகளுக்கும் மேலான இராணுவத்தில் சேவையாற்றிய அவர், கடந்த 2002ல் ஓய்வு பெற்றிருந்தார். இந்நிலையில் அவரது மறைவுக்கு இந்திய ராணுவம் இரங்கல் தெரிவித்திருக்கிறது.
கடந்த 1940ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்த இவர், 1959ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைந்தார். முதலில் பீரங்கி படையில் இருந்த இவர், தனது திறமையால் தொடர்ந்து உயர் பதவிக்கு உயர்ந்தார். குறிப்பாக 1993ம் ஆண்டு முதல் 1995 வரை காஷ்மீர் பள்ளத்தாக்கில் XV கார்ப்ஸின் ஜெனரல் அதிகாரியாக இவர் பதவி வகித்திருக்கிறார். இந்த காலத்தில், காஷ்மீரில் கலவரக்கார்களை பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தார். இது அதற்கு முன்னர் யாரும் செய்திராத செயலாகும்.

சுந்தரராஜனின் ராணுவ யுத்தியை பாராட்டி இவருக்கு அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் (AVSM) வழங்கப்பட்டது. இதனையடுத்து பல்வேறு பதவிகளை வகித்து வந்த இவர் கடந்த 2000ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக பதவி உயர்ந்தார். இரண்டாண்டு காலம் இந்த பதவியில் இருந்த அவர் 2002ம் ஆண்டு பதவி ஓய்வு பெற்று சென்னையில் குடியேறிவிட்டார். 43 ஆண்டு ராணுவ வாழ்க்கையில் தான் சந்தித்த பல்வேறு சவால்கள் குறித்தும், ராணுவம் குறித்தும் இரண்டு புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று அவர் சென்னையில் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு இந்திய ராணுவம் அஞ்சலி செலுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications