ஆமா ஒன்னு சேரனும்! அறிக்கை விட்ட சசிகலா..முன்னரே சரி சொன்ன ”மாஜி”.. எடப்பாடிக்கு ஜெர்க் கொடுக்குமா?
சென்னை: மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த நிலையில் இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது.. அதிமுக ஒன்று சேர வேண்டும் என அறிக்கை விட்டுள்ளார் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா. இந்நிலையில் கோபங்களை மறந்து அதிமுகவினர் மீண்டும் ஒன்றிணைவது அவசியம் என போஸ்டர் ஒட்டியுள்ளதோடு, வீடியோவையும் வெளியிட்டுள்ளார் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வான ஜேசிடி பிரபாகர்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், சில தொகுதிகளில் டெபாசிட் போய், பல தொகுதிகளில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இதன் காரணமாக அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் முளைத்துள்ளது.

தமிழ்நாடு புதுவையில் மொத்தம் இருக்கும் 40 தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பெரிய அளவில் திமுக கூட்டணிக்கு நெருக்கடி அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பலத்த பின்னடைவை சந்தித்து இருக்கிறது. ஒரு தொகுதியில் கூட அந்த கட்சி முன்னிலை பெற முடியவில்லை. அதே நேரத்தில் பாஜக பெரிய அளவில் இந்த தேர்தலில் ஆதிக்கம் செலுத்துகிறது. குறிப்பாக தமிழகம் புதுவையில் 10 தொகுதிகளில் அந்த கட்சி வேட்பாளர்களும் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கின்றனர்.
இதனிடையே அதிமுக தலைமைக்கு வந்த பிறகு சந்தித்த அனைத்து தேர்தல்களிலுமே அதிமுக தோல்வியை சந்தித்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சில பிரச்சினைகள் முளைத்திருக்கிறது. காரணம் டிடிவி, ஓபிஎஸ் ஆகியோர் தங்கள் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளியுள்ளனர். இதனால் அவர்கள் இருந்தால் மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என குரல்கள் எழுந்துள்ளது. இதற்கிடையே சசிகலாவின் அறிக்கை அதிமுகவுக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், அம்மா அவர்களால் கஷ்டப்பட்டு வளர்க்கப்பட்ட இயக்கம் அதன் வளர்ச்சியில் எனது தன்னலமற்ற பங்கும் அடங்கியிருப்பதால் இந்த இயக்கம் எந்நாளும் தோல்வி அடைந்துவிடக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் தான் நான் இத்தனை காலம் பொறுமையாக இருந்தேன். கட்சியை ஒருங்கிணைக்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டேன். ஒரு சிலரின் தனிப்பட்ட சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக இயக்கம் அழிவதை இனியும் என்னால் வேடிக்கை பார்க்கமுடியாது” என கூறியிருந்தார்.
மேலும்,மேலும், இதுவரை இயக்கம் என்றைக்கும் கண்டிராத வகையில் 7 இடங்களில் டெபாசிட் தொகையை இழந்து இருப்பது மிகப்பெரிய வேதனை. இதற்காகவா இருபெரும் தலைவர்களும் இந்த இயக்கத்தின் முன்னேற்றத்திற்காக தங்கள் இறுதிமூச்சு உள்ள வரை அயராது பாடுபட்டார்கள்?. இது அவர்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம். இதனை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
இதனால் கட்சியின் நலன் கருதியும், தமிழக மக்களின் நலன் கருதியும் ஒற்றுமையோடு இணைந்து பணியாற்ற அனைவரும் வர வேண்டும். உங்கள் அனைவரையும் "ஜெயலலிதா இல்லம்" அன்புடன் வரவேற்கிறது என கூறியிருந்தார். சசிகலாவின் அறிக்கை நியாயமானது தான் என சிலர் தற்போதே சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். ஏற்கனவே ஓபிஎஸ் -டிடிவி கைகோர்த்திருக்கும் நிலையில், சசிகலாவும் பேசியுள்ளது அதிமுகவினரிடையே பேசுபொருளாகியுள்ளது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியும் இறங்கி வர வேண்டுமென்ற கோரிக்கை குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சசிகலாவின் குரலுக்கு வலு சேர்ப்பது அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ.வான ஜேசிடி பிரபாகர் சென்னையில் போஸ்டர் ஒட்டியுள்ளார். அதில்,”ஆயிரம் ஆண்டு காலம் ஆனாலும் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என சூளுரைத்த எம்ஜிஆர், 100 ஆண்டு காலம் அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என விரும்பிய ஜெயலலிதா, இருபெரும் தலைவர்களின் லட்சிய முழக்கத்தை நிறைவேற்ற வேண்டிய அனைவரும் பிரிந்து கிடப்பதா? கோபதாபங்களை மறந்து, கருத்து வேறுபாடுகளை களைந்து இயக்கத்தை காப்பதே லட்சியம் என ஒன்றுபட வேண்டிய தருணம் இது ஒருங்கிணைப்போம் ஒன்றிணைவோம்” என கூறப்பட்டுள்ளது. மேலும் இதே கருத்தினை வலியுறித்தி அவர் வீடியோவும் வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications