தமிழக வணிகர்களை ஜாதி, மதம் கடந்து ஒருங்கிணைத்த வெள்ளையன்- மே.5 வணிகர் தினத்தை உருவாக்கியவர்!
சென்னை: தமிழ்நாட்டில் ஜாதி மதம் கடந்து அனைத்து வணிகர்களையும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை என்ற பெயரில் ஒருங்கிணைத்த நிறுவனத் தலைவரான வெள்ளையன் இன்று காலமானார். மே 1-ந் தேதி எப்படி உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறதோ அதே போல தமிழ்நாட்டில் மே 5-ந் தேதியை வணிகர் தினமாக கொண்டாடச் செய்த ஆளுமை வெள்ளையன் மறைவு தமிழ்நாட்டு வணிகர்களுக்கு பேரிழப்பாகும்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஏராளமான வணிகர் சங்கங்கள், அமைப்புகள், இயக்கங்கள் இருக்கின்றன. இந்த சங்கங்கள், அந்த அந்த பகுதி வணிகர்களின் பாதுகாப்புக்கும் உரிமைக்கும் குரல் கொடுத்து வந்தன. அதேநேரத்தில் தமிழ்நாடு அளவில் வணிகர்களின் குரலை வெளிப்படுத்த ஒரு அமைப்பு தேவை என்ற அடிப்படையில் த.வெள்ளையனால் உருவாக்கப்பட்டதுதான் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை. தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இருக்கக் கூடிய அத்தனை வணிகர் சங்கங்களையும் ஜாதி, மதம் கடந்து "வணிகராக" ஒருங்கிணைத்த பெருமை த.வெள்ளையனுக்கு உண்டு.

அதேபோல மே 5-ந் தேதியை வணிகர் தினமாக கடைபிடித்து அன்றைய தினம் பிரம்மாண்டமாக மாநாடு நடத்துவதையும் அறிமுகம் செய்தவர் வெள்ளையன்.
தமிழ்நாடு பொது விற்பனை வரி சட்டத்தில் வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரி வந்த போது த.வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முழுமையாக எதிர்த்தது. ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவை வரியால் வணிகர்கள் துயரப்படுவதையும் கடுமையாக எதிர்த்து போராடி வருகிறது வணிகர் சங்கங்களின் பேரவை. தமிழ் பாதுகாப்பு இயக்கம், ஈழத் தமிழர் ஆதரவு போராட்டங்களில் பங்கேற்றவர் வெள்ளையன். இவரது சகோதரர்தான் மூத்த பத்திரிகையாளரும் திரைப்பட இயக்குநருமான புகழேந்தி தங்கராஜ்.
10 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் சதுரங்க ஆட்டங்களில் வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சிக்கிக் கொண்டது. இதனால் வெள்ளையன் தலைமையிலான பேரவை இரண்டாக பிளவுபட்டது. தற்போது உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வணிகர்களின் பாதுகாவலராக திகழ்ந்த வெள்ளையன் மறைவெய்திவிட்டார். வெள்ளையன் மறைந்தாலும் மே 5-ந் தேதி அவர் உருவாக்கிய வணிகர் தினம் தமிழக வணிகர்களிடத்தில் நிலைத்தே நிற்கும்!












Click it and Unblock the Notifications